ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இருந்து பாதியுடன் விலகிய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 4வது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளாஅர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் 2ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்திருந்தது.

இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த சூழலில், 2ஆம் நாள் ஆட்டத்திற்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின் அவசர அவசரமாக சென்னை திரும்பினார். குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ எமர்ஜென்சி காரணமாக அஸ்வின் 3வது டெஸ்டில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அஸ்வினின் தாயார் உடல்நிலை சரியில்லாததால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதன்பின் அஸ்வின் இல்லாமலேயே 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இங்கிலாந்து அணியை 319 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ததோடு, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபார சதம் காரணமாக 300 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் சூழலில், இங்கிலாந்து அணி வெற்றிபெற 557 ரன்களை இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் இன்று காலையிலேயே சென்னையில் இருந்து விமானம் வாயிலாக ராஜ்கோட் புறப்பட்டார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த நிலையில் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணியுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார்.
இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றே அஸ்வின் எந்த நேரத்திலும் இந்திய அணியுடன் இணையலாம் என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். ஆனால் ஒரு வீரர் எவ்வளவு நிமிடங்கள் களத்தில் இருந்து வெளியே இருக்கிறாரோ, அவ்வளவு நேரம் பவுலிங் செய்வதற்கு முன் காத்திருக்க வேண்டும் என்பது கிரிக்கெட் விதியாகும்.
ஆனால் அஸ்வினின் சூழலை கருத்தில் கொண்டு பென்லாடி டைம் விதிகள் கருத்தில் கொள்ளப்படாது என்று பார்க்கப்படுகிறது. தாயாரின் உடல்நிலை சரியில்லாத போதும், சென்னைக்கு திரும்பி அவரை பார்த்துவிட்டு உடனடியாக அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பரிதாப சூழலில் இருக்கும் இங்கிலாந்து அணியை வீழ்த்த அஸ்வினும் இணைந்துள்ளதால், இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.