சென்னை: இந்திய அணியின் சீனியர் வீரரான கருண் நாயரை அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஒருவேளை கருண் நாயர் மீது நம்பிக்கை இல்லை என்றால், வாஷிங்டன் சுந்தரை நம்பர் 3ல் களமிறக்கி சோதனை செய்யலாம் என்றும் அஸ்வின் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்க உள்ளது. இதனிடையே 3 இந்திய வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். அதேபோல் ரிஷப் பண்ட் விரலில் ஏற்பட்டுள்ள காயம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்திருக்கிறார். இதுதொடர்பாக அஸ்வின் பேசுகையில், வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் மீது நம்பிக்கை இருந்தால், அவரை நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும். அதேபோல் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டும்.
அதேபோல் கருண் நாயரையும் தமிழக வீரர் சாய் சுதர்சனை வைத்து மாற்றம் செய்ய வேண்டும். இதற்கேற்ப பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய பிளேயிங் லெவனில் சாய் சுதர்சன் அல்லது துருவ் ஜுரெல் இடம்பெற வேண்டும். 4வது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தை குல்தீப் யாதவிடம் கொடுங்கள்.
அதேபோல் சாய் சுதர்சனை தொடக்க வீரராகவோ அல்லது நம்பர் 3 பேட்ஸ்மேனாகவோ பார்க்கவில்லை என்றால், இந்த டெஸ்ட் தொடரில் அவரை அந்த பேட்டிங் வரிசையில் விளையாட வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கருண் நாயர் கட்டாயம் அணியில் இருக்க வேண்டுமென்றால், அவரை தொடக்கம் முதலே நம்பர் 3 பேட்ஸ்மேனாக விளையாடியிருக்க வேண்டும்.
கடந்த போட்டியில் கருண் நாயர் ஆட்டமிழப்பதற்கு முன்பு வரை மிகச்சிறப்பாக விளையாடி வந்தார். அவர் இன்னும் பெரிய ஸ்கோர் ஒன்றை விளாசி, இந்திய அணியில் தனது இடத்தை பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் 5 டெஸ்ட் போட்டிகளிலும் கருண் நாயர் ஆட்டத்தைப் பார்க்க விரும்புகிறோம். அதெபோல் நிதீஷ் குமார் ரெட்டியின் இடத்தில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.