மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலகில் உள்ள கிரிக்கெட் வீரர்களிலேயே மிகச் சிறந்த தடுப்பாட்ட பேட்ஸ்மேன் என சமீபத்தில் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார். மேலும் ரிஷப் பண்ட் தடுப்பாட்டம் ஆடும்போது பத்து முறை தனது விக்கெட்டை இழந்து இருந்ததை எனக்கு காண்பித்தால் எனது பெயரை நான் மாற்றிக் கொள்கிறேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி உள்ளார்.
ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக அஸ்வின் இவ்வாறு பேசி இருப்பது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது. சிலர் ரிஷப் பண்ட் பத்து முறை தடுப்பாட்டத்தில் விக்கெட்டை இழந்த வீடியோக்களை சேகரிக்கப் போவதாகவும், அஸ்வினின் பெயரை மாற்றப் போவதாகவும் வேடிக்கையாக கூறி வருகின்றனர்.

இதனிடையே ரிஷப் பண்ட்டின் பேட்டிங் பற்றி அஸ்வின் பேசியது உண்மைதான் என பலரும் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி உள்ளனர். ரிஷப் பண்ட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் தடுப்பாட்டம் ஆடி 10 முறை ஆட்டமிழக்கவில்லை. இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியதாவது, "நாம் ரிஷப் பண்ட் மிக அரிதாகவே தடுப்பாட்டம் ஆடும் போது ஆட்டம் இழக்கிறார் என்பதை உணர வேண்டும். உலக கிரிக்கெட்டில் அவர் சிறந்த தடுப்பாட்டத்தை வைத்திருக்கிறார்." என்றார்,
மேலும், "தடுப்பாட்டம் என்பது சவாலான ஒரு விஷயம். அவர் இலகுவான கைகளுடன் ஆடுகிறார். ரிஷப் பண்ட் பத்து முறை தடுப்பாட்டத்தில் ஆட்டம் இழந்ததை எனக்கு காண்பித்தால் எனது பெயரை நான் மாற்றிக் கொள்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் என்பது எளிதான விஷயம் அல்ல. நீங்கள் போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர் சிட்னியில் இரண்டு விதமான ஆட்டத்தை விளையாடி இருக்கிறார்."
"முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் எடுத்தார் பண்ட். அப்போது பண்ட் உடலில் பலமுறை பந்து தாக்கியது. அவரது இன்னிங்ஸில் மிக குறைவாக பேசப்பட்டது அதுதான். ஆனால், அது நியாயம் இல்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். அனைவரும் அதைப் பற்றி பாராட்டுகிறார்கள். ஆனால், முதல் இன்னிங்ஸில் அவர் என்ன செய்தார் என்பதை அனைவரும் மறந்து விட்டார்கள்."
"பண்ட் ஆடிய இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை மட்டும் பாராட்டுகிறார்கள். நான் ரிஷப் பண்ட்டுக்கு வலைப் பயிற்சியின் போது பந்து வீசி இருக்கிறேன். அவர் எப்போதும் ஆட்டம் இழந்ததில்லை. அவர் பந்தை எட்ஜ் செய்ய மாட்டார். எல்பிடபுள்யூ-வும் ஆக மாட்டார். அவர் சிறந்த தடுப்பாட்டத்தை வைத்துள்ளார். அதை பலமுறை நான் அவருக்கு சொல்ல முயன்று இருக்கிறேன்."
"ரிஷப் பண்ட் பல ஷாட்களை ஆடக்கூடியவர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதை ஆடாமல் இருப்பதற்கு அவர் முயல வேண்டும் என்பதே எனது கருத்து. டெஸ்ட் கிரிக்கெட் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப ஆடுவது. கடைசி ஏழு ஆண்டுகளில் டெஸ்ட் பேட்டிங் மிகவும் கடினமாக மாறி இருக்கிறது. 2018 முதல் 2025 வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் பேட்டிங் சராசரி வெகுவாக சரிவை சந்தித்து இருக்கிறது." என்றார் அஸ்வின்.