சென்னை: இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் சேர்ப்பதில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக சமீபத்தில் ஓய்வு பெற்ற சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார்.
பேட்டிங் செய்யும் திறனுடைய சுழற் பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தருக்கு சில மாதங்களாக இந்திய அணியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் அணி என மூன்று விதமான இந்திய அணிகளிலும் இடம் பிடித்து வருகிறார். இந்த வாய்ப்பு சமீப காலமாக எந்த சுழற் பந்துவீச்சாளருக்கும் கிடைக்கவில்லை.

அந்த வகையில் பார்க்கும்போது வாஷிங்டன் சுந்தருக்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் பின்னணி என்ன? என்ற கேள்வி இருந்தது. அதற்கு அஸ்வின் விளக்கம் அளித்து இருக்கிறார். பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதால் அவரை ஒரு ஆல் ரவுண்டராக அணியில் தேர்வு செய்ய ஆர்வமாக இருக்கிறார் எனக் கூறி இருக்கிறார்.
மேலும், போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப வாஷிங்டன் சுந்தரை பேட்டிங்கில் பின் வரிசையிலோ அல்லது மிடில் ஆர்டரிலோ பேட்டிங் செய்ய வைக்கலாம் என்பதுதான் அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார் அஸ்வின். வாஷிங்டன் சுந்தரை அணியில் தேர்வு செய்வதால் கூடுதலாக ஒரு பவுலரையும் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.
இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், "நான் ஒருதலைப் பட்சமாக பேசவில்லை. ஆனால், கவுதம் கம்பீர் வாஷிங்டன் சுந்தரை அதிக மதிப்பீடு செய்து வைத்து இருக்கிறார். அதற்கு காரணம் வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் தான். அவர் இந்திய பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய பயன்படுத்தப்படுவார்." என்றார்.
மேலும், "ஒருநாள் போட்டிகளை நீங்கள் உற்று நோக்கினால் ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார்கள். ஹர்திக் பாண்டியா ஏழாவது வரிசையிலும், வாஷிங்டன் சுந்தர் எட்டாவது வரிசையிலும் பேட்டிங் செய்வார்கள். இதன் மூலம் மேலும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் அல்லது குல்தீப் யாதவுடன் மேலும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்ய முடியும்." என்று கம்பீரின் திட்டம் பற்றி கூறினார் அஸ்வின்.