சென்னை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் தாயார் உடல்நிலை பழைய நிலைக்கு திரும்பியது குறித்து அவரின் மனைவி ப்ரீத்தி பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் அந்த அணியின் கிராலி விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டிகளிலேயே மைல்கல் விக்கெட்டை எட்டுவார் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் ராஜ்கோட் மைதானத்தில் தான் அஸ்வின் 500வது விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து உற்சாகமான அஸ்வின் அன்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிலும் தான் ஒரு ஆக்சிடன்டல் ஸ்பின்னர் என்று அஸ்வின் கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அன்று இரவே அஸ்வின் அவசர அவசரமாக சென்னை திரும்பினார்.
அவரின் தாயார் உடல்நிலை மோசமானதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த பின் உடனடியாக பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திடம் தகவல் கூறிய அஸ்வின், 3வது டெஸ்டில் இருந்து பாதியுடன் விலகினார். இதனால் 3வது நாள் ஆட்டத்தில் அஸ்வின் இல்லாமலேயே இந்திய அணி பவுலிங் செய்தது.
இதன் காரணமாக 500வது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை கூட அஸ்வினால் கொண்டாட முடியாமல் போனது. தொடர்ந்து 4வது நாளில் பிரத்யேக விமானம் மூலம் பயணித்து மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார் அஸ்வின். இதனைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐதராபாத் டெஸ்ட் போட்டியிலேயே 500வது விக்கெட்டை வீழ்த்துவார் என்று காத்திருந்தோம். ஆனால் நடக்கவில்லை. தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் மைல்கல்லை எட்டுவார் என்று நினைத்தோம். அங்கும் நடக்கவில்லை. ஆனால் 499 விக்கெட்டுகள் என்ற எண்ணிக்கையை எட்டிய போது, டன் கணக்கில் ஸ்வீட் வாங்கி கொடுத்தோம்.
தொடர்ந்து ராஜ்கோட் டெஸ்டில் 500வது விக்கெட்டை வீழ்த்தினார். அமைதியாக கடந்து சென்றுவிட்டது. ஆனால் 500 மற்றும் 501வது விக்கெட்டுக்கு இடையில் நிறைய நடந்துவிட்டது. எங்கள் வாழ்க்கையின் மிக நீண்ட 48 மணி நேரம் இதுதான் என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.