சென்னை : இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வினின் விக்கெட் வேட்டை இனியும் தொடரும் என்று முன்னாள் வீரர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 445 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் என்ற பெருமையையும், அதிவேகமாக வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். இதனையொட்டி பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடிய தமிழக வீரர் பாலாஜி அஸ்வின் குறித்து மைக்கேல் தமிழ் மூலமாக பிரத்யேக பேட்டி மூலம் வாழ்த்து கூறியுள்ளார். அதில், இந்திய கிரிக்கெட்டில் படைக்கப்பட்ட மகத்தான சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். வரும் காலங்களில் அஸ்வின் இன்னும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மாணவராக எப்போதும் இருந்துள்ளார். அவரின் திறமை மீது எந்த சூழலிலும் சந்தேகம் வந்ததே கிடையாது.
இந்திய அணிக்காக அறிமுகமானதில் இருந்து இப்போது வரை உச்சத்திலேயே இருக்கிறார். என்னை பொறுத்தவரை அஸ்வின் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் விளையாடுவதற்கு முன் அஸ்வின் எப்படி தயாராகிறார் என்பது எப்போதும் ஆச்சரியமானது தான். ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்துவார். கிரிக்கெட் விளையாடும் அத்தனை வீரர்களுக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடவே அதிகமாக விரும்புவார்கள்.
ஏனென்றால் அதுதான் கிரிக்கெட் விளையாட்டின் தூய்மையான வடிவம். அதனை உச்சமாக வைத்து கொள்ளலாம். அப்படியான டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 100 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது பெருமைமிக்க தருணம். இளம் வீரராக இருக்கும் போது இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையில் தான் அனைவரும் தொடங்குவோம். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் நிலைத்திருப்பது சாதாரணம் கிடையாது. அதனால் அஸ்வின் படைத்துள்ள சாதனை மகத்தானது என்று கூறியுள்ளார்.