லண்டன்: வெளிநாட்டில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் தொடரில் நம்பர் 6 பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற விவிஎஸ் லக்ஷ்மண் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார். 2002ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 474 ரன்களை விவிஎஸ் லக்ஷ்மண் விளாசிய நிலையில், அதனை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களை எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 247 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்களை எடுத்திருந்தது.

இதன்பின் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதமடிக்க, ஆகாஷ் தீப் அசத்தலாக விளையாடி 66 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில், கருண் நாயர் ஏமாற்றம் அளிக்க, ஜடேஜா - துருவ் ஜுரெல் கூட்டணி நிதானமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை 300 ரன்களை கடந்து கொண்டு சென்றது.
தேநீர் இடைவேளையின் போது ஜடேஜா 26 ரன்களுடனும், துருவ் ஜுரெல் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் ஜடேஜா 19 ரன்களை கடந்த போது மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது இந்திய அணி வெளிநாடுகளில் ஆடிய ஒரு டெஸ்ட் தொடரில் நம்பர் 6 அல்லது அதற்கு கீழான பேட்டிங் வரிசையில் ஆடிய வீரர்களில் விவிஎஸ் லக்ஷ்மண் 474 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது.
2002ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடிய போது விவிஎஸ் லக்ஷ்மண் இந்த சாதனையை படைத்தார். தற்போது 23 ஆண்டுகளுக்கு பின் ஜடேஜா இந்த சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 10 இன்னிங்ஸில் 4 அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 489 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் ஜடேஜா இன்னும் 11 ரன்களை எடுத்தாலே, எளிதாக 500 ரன்களை எட்ட முடியும். இதன் மூலமாக ஒரே டெஸ்ட் தொடரில் 500 ரன்களை விளாசிய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த டெஸ்ட் தொடரிலேயே சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் 500 ரன்களுக்கு மேல் விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது.