லண்டன்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீர ஜோ ரூட் ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கின்றார்.5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வானம் மேகமூட்டமாக இல்லாமல் சூரியன் சுட்டெரித்ததால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடி காட்டாமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென உரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடி வீரர் பென்டக்கட் 40 பந்துகளில் 23 ரன்களிலும் மற்றொரு தொடக்க வீரரான ஜாக் கிராலி 43 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து நிதிஷ்குமார் பந்துவீச்சில் ஒரே ஓவரில் பெவிலியன் திரும்பினர். இந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் பார்ட்னர்ஷிப் சேர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிதானமாக ஆடிய ஆலி போப் 104 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி மூன்றாம் விக்கெட்டுக்கு 109 ரன்களை சேர்த்தது. இதுபோன்று உலகின் நம்பர் ஒன் வீரராக தற்போது டெஸ்ட் தரவரிசையில் இடம் பெற்றுள்ள ஹாரி புரூக் களத்திற்கு வந்தார். அப்போது பும்ரா அவருடைய விக்கெட்டை 11 ரன்களில் வீழ்த்தினார். இது ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது.
எனினும் ஒரு கட்டத்தில் ஜோ ரூட் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கனை சேர்த்து வந்தார். இறுதியில் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ரூட் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஒரு ரன் ஓட முயற்சி செய்தார். அப்போது பந்தை பிடித்த ஜடேஜா அங்கிருந்து ஜோ ரூட்டை பார்த்து, எங்கே ஓடிப் பாரேன் என்று சைகையில் செய்தார்.
அதை பார்த்து ஜோ ரூட் சிரித்தார். உடனே ஜடேஜா பந்தை கீழே வைத்து இப்போதாவது ஓடு என்று கூறினார். இதை அடுத்து மைதானத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. ஜோ ரூட் ஓடாததால் பந்தை எடுத்து ஜடேஜா மீண்டும் எறிந்தார். ஜோ ரூட் இன்றைய ஆட்டத்திற்குள் 100 ரன் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 83 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருக்கிறது. பும்ரா,ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் நிதிஷ்குமார் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கின்றார்.