பிர்மிங்காம்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டாவது போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா பிசிசிஐ விதிமுறைகளை மீறியதாகத் தெரியவந்துள்ளது. எனினும், அவர் மீது பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்காது எனவும் கூறப்படுகிறது.

இரண்டாவது நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா மற்ற வீரர்களுக்கு மாறாக சற்று முன்னதாகவே மைதானத்திற்கு வந்துவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ சில விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது. அதன்படி, இந்திய வீரர்கள் மைதானத்திற்குச் செல்லும்போதும், மைதானத்தில் இருந்து மீண்டும் ஹோட்டல் அறைக்குத் திரும்பும்போதும் ஒன்றாக ஒரே பேருந்தில்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. அந்த விதிமுறையைத்தான் ரவீந்திர ஜடேஜா மீறி இருக்கிறார்.
எனினும், இது இந்திய அணியின் நலனுக்காகத்தான் என்பதால் பிசிசிஐ அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது எனக் கூறப்படுகிறது. ரவீந்திர ஜடேஜா இரண்டாவது நாளிலும் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்ற நிலையில், போட்டி நாள் துவங்குவதற்கு சில மணி நேரம் முன்பாகவே மைதானத்திற்கு வந்தார். அவர் வலைப்பயிற்சியில் பவுன்சர் பந்துகளைச் சந்தித்தார். இதன் மூலம், போட்டியின்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்வது எளிதாக இருக்கும் என்று அவர் திட்டமிட்டிருந்தார்.
ஜடேஜாவின் திட்டம் வேலை செய்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் எடுத்த நிலையில், அவருக்கு அடுத்த அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா (89 ரன்கள்) இருந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள் எடுத்திருந்தார்.
ரவீந்திர ஜடேஜாவின் இந்த அர்ப்பணிப்பு காரணமாகவே அவர் அணிப் பேருந்தில் மற்ற வீரர்களுடன் பயணிக்காமல் முன்னதாகவே ஆடுகளத்துக்கு வந்தார் என்பதால், பிசிசிஐ அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் 587 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் 77 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது.