மான்செஸ்டர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பென் ஸ்டோக்ஸ் கைக்குலுக்க மறுத்ததால், ஜடேஜா அவரை அழைத்து இது குறித்து காரசாரமாகப் பேசியது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணியின் திமிர்த்தனமான செயல்களைக் குறிப்பிட்டு இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும், இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்றிருந்தது. நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.

போட்டியின் முடிவில், இந்தியா முதல் இன்னிங்சில் 311 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடி ஐந்தாவது நாள் வரை போட்டியை நீட்டித்து சென்றது. இரண்டாவது இன்னிங்ஸின் போது ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்துகொண்டிருந்தனர். அப்போது, இன்னும் 14 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போட்டியைக் கைக்குலுக்கி டிரா செய்து முடித்துக்கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார்.
ஆனால், அப்போது ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா 85 ரன்கள் சேர்த்திருந்ததோடு, தங்கள் சதத்தை நெருங்கி இருந்தனர். இதனால், போட்டியை டிரா செய்ய ஜடேஜா மறுத்துவிட்டார். இந்தச் செயலால் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிற இங்கிலாந்து வீரர்கள் கோபமடைந்தனர். ஜடேஜா - சுந்தரை சீண்டும் வகையில் நடந்து கொண்டனர்.
இதன் பிறகு, ரவீந்திர ஜடேஜா சதம் அடித்தார், வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்தார். சதத்திற்குப் பிறகு இந்திய அணி போட்டியை டிரா செய்துகொள்வதாக அறிவித்தது. அதன் பிறகு, ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-க்கு கை குலுக்க முயன்றார். ஆனால், பென் ஸ்டோக்ஸ் அவரைப் பார்க்காதது போல வாஷிங்டன் சுந்தருக்கு மட்டும் கை குலுக்கிவிட்டு, தனது அணியினருக்கு கை குலுக்கிக்கொண்டு சென்றார்.
இதைக் கண்ட ஜடேஜா கோபமடைந்து, ஸ்டோக்ஸை அழைத்து இது குறித்துப் பேசினார். உடனடியாக பென் ஸ்டோக்ஸ் கை குலுக்கினாலும், ஜடேஜாவின் முகத்தைக்கூட பார்க்கவில்லை. இதன் மூலம், ஜடேஜா போட்டியை டிரா செய்ய ஒப்புக்கொள்ளாததால் பென் ஸ்டோக்ஸ் கோபமடைந்திருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
மேலும் ஜடேஜா சதம் அடித்த பின் அதை கொண்டாடிய போது வாஷிங்டன் சுந்தருக்கு கைகுலுக்கி போட்டியை டிரா செய்ததாக அறிவிக்கலாம் என இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் திட்டம் போட்டார். ஆனால், சுந்தர் அதை தடுத்து விட்டார்.
இந்தச் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்கக் கூடாது என்பதற்காகவே இங்கிலாந்து அணி போட்டியை டிரா செய்யக் கேட்டதாகவும், வேண்டுமென்றே அந்த நேரத்தில் இந்திய வீரர்களைச் சீண்டுவதே அவர்களது நோக்கமாக இருந்தது எனவும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.