ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜுரெல் அரைசதம் விளாசிய பின் சல்யூட் அடித்து மரியாதை செய்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
16 முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடிய இளம் வீரர் துருவ் ஜுரெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இந்திய மைதானங்களிலேயே போதுமான அனுபவத்தை பெறாத துருவ் ஜுரெல் எப்படி சர்வதேச கிரிக்கெட்டில் சமாளிப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இஷான் கிஷன் விலகியதன் காரணமாகவே துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டதாக சில விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் அத்தனை விமர்சனங்களையும் முதல் முறையாக களமிறங்கிய இன்னிங்ஸிலேயே துருவ் ஜுரெல் பதிலடி கொடுத்தார். அறிமுக போட்டியில் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும், அவரின் விக்கெட் கீப்பிங் திறமை பலரையும் வியக்க வைத்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்தது. அப்போது குல்தீப் யாதவை ஒருபுறம் வைத்து துருவ் ஜுரெல் ஆடிய ஆட்டம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் விக்கெட்டை கொடுக்க கூடாது என்று குல்தீப் யாதவ் முன்னிறுத்தியதன் மூலம் ஈகோவையும் வெளியில் வைத்து அசரடித்தார் ஜுரெல்.
இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தில் துருவ் ஜுரெல் ரன் சேர்ப்பதையே நோக்கமாக வைத்து விளையாடினார். குல்தீப் யாதவுடன் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். பின்னர் குல்தீப் யாதவ் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சிறப்பாக ஆடிய துருவ் ஜுரெல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை விளாசி அசத்தினார்.
இவரின் அரைசதத்தை பார்த்து ஓய்வறையில் இருந்து அத்தனை வீரர்களும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர். அதேபோல் துருவ் ஜுரெல் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். துருவ் ஜுரெல் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகனாவார். இதனால் தந்தைக்கு மரியாதை அளிக்கும் வகையில் சல்யூட் அடித்து அரைசதத்தை கொண்டாடியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.