மும்பை : இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் தவிர்ப்பது ஏன் என்பது குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் 4 முறை பேட்டிங் செய்த கேஎஸ் பரத் ஒருமுறை கூட நிறைவான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. சொந்த மண்ணில் களமிறங்கிய போதும், கேஎஸ் பரத் 20 ரன்களை கூட சேர்க்க முடியாமல் வெளியேறினார்.

இதனால் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பரை பிசிசிஐ தேர்வு குழு தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே துருவ் ஜுரெல் இந்திய அணியில் இருக்கும் நிலையில், அனுபவ விக்கெட் கீப்பரான இஷான் கிஷனை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று விவாதம் எழுந்துள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய இஷான் கிஷன் என்ன செய்கிறார் என்ற தகவல் இதுவரை வெளி வரவில்லை.
இந்திய அணியில் இருந்து மன சோர்வு காரணமாக விலகிய இஷான் கிஷன், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் துபாய் விடுமுறை கொண்டாட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். இதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நெருங்கிய போது, அவர் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்று விளையாடினால் மட்டுமே தேர்வு குழு தரப்பில் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடினார்கள்.
ஆனால் 5 ரஞ்சி டிராபி போட்டிகள் முடிவடைந்த சூழலிலும் இஷான் கிஷன் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாட முன் வரவில்லை. இந்த நிலையில் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இஷான் கிஷன் விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் எப்போது அணிக்கு திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ, அப்போது திரும்பலாம். அதற்கு முன் அவர் கிரிக்கெட் போட்டிகளை விளையாட தொடங்கியிருக்க வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் ரஞ்சி டிராபி போட்டியில் இஷான் கிஷன் விளையாட வேண்டும் என்று மறைமுகமாக கூறப்படுவதாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் இஷான் கிஷன் இதுவரை என்ன செய்கிறார் என்பது கூட மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. இதனால் இஷான் கிஷன் நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இடம்பிடிப்பதே இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.