மும்பை: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 9 ஆண்டுகளாக பயிற்சியளித்து வந்த ஜுவாலா சிங் மைக்கேல் தளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியை பார்க்கலாம்.
2008ம் ஆண்டுக்கு பின் இந்திய அணியின் இடதுகை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த 20 ஆண்டுகளில் இளம் வயதில் இரட்டை சதம் விளாசிய 2வது இளம் வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 209 ரன்களை விளாசிய நிலையில், இந்திய அணி மற்ற வீரர்கள் அனைவரும் இணைந்து 187 ரன்களை மட்டுமே சேர்த்தனர்.

இதன் மூலமாக இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர தொடக்க வீரராக மாறியுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு முதல் ஜெய்ஸ்வாலுக்கு பயிற்சி கொடுத்த பிரபல பயிற்சியாளர் ஜுவாலா சிங் மைக்கேல்-க்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல்முறையாக 2013ஆம் ஆண்டு தான் சந்தித்தேன். அவர் 2022 ஜனவரி வரை என்னுடன் தான் இருந்தார். அந்த நேரத்தில் சோசியல் மீடியாவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரை கூறினேன்.
அதேபோல், நீ எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை பார்க்க தொலைக்காட்சிகள் நேரில் வர வேண்டுமே தவிர, உன்னை பற்றி நீயே சோசியல் மீடியாவில் பேசக் கூடாது. நீ ஏதாவது அசாத்தியத்தை நிகழ்த்தினால், அவர்கள் உன்னை பற்றி பேசுவார்கள். அதேபோல் தேவையில்லாத ஏராளமான மனிதர்கள் வாழ்க்கையில் வந்து கவனத்தை திசை திருப்புவார்கள் என்று கூறினேன். இப்போது அவர் சோசியல் மீடியாவை அவ்வப்போது பயன்படுத்துகிறார். அப்படிதான் அவரின் இலக்கு மற்றும் அணுகுமுறையை கட்டமைத்தேன்.

அதேபோல் எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை விட நிகழ்காலம் எப்போதும் முக்கியம் என்று சொல்வேன். ஏனென்றால் இன்றைய நாளில் சிறப்பாக செய்தால் தான் நாளைய நாள் நமக்கானதாக இருக்கும். அந்த பழக்கத்தையும் சிறு வயதிலேயே ஜெய்ஸ்வாலுக்கு கற்றுக் கொடுத்தேன். அது அவருக்கு இப்போதும் உதவியாக உள்ளது. எப்போது அவரிடம், ஒரு தொடர், ஒரு ஆட்டம், ஒரு பால் என்று மட்டுமே கூறுவேன்.
எந்த நேரத்திலும் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துவது அவருக்கு ஒரு மந்திரமாகவே மாறிவிட்டது. அவரிடம் நல்ல பழக்கம் இருந்ததால், அவரால் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடிகிறது. அவர் எப்போதும் சீராக ரன்களை சேர்ப்பார் என்று நம்புகிறேன். அதேபோல் ஜெய்ஸ்வால் சிறுவயதாக இருக்கும் போது, மும்பை அணிக்காக விளையாட வேண்டுமென்றால் நிச்சயம் பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும் என்று கூறிவேன்.
ஏனென்றால் ஒரு சதமோ, ஒரு அரைசதமோ யாரையும் திரும்பி பார்க்க வைக்காது. ஆனால் இரட்டை சதம் அல்லது ஒரு பெரிய ஸ்கோர் தான் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். அதுதான் பயிற்சியாளராக எனது ஃபார்முலாவும் கூட. அதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போதும் செயல்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. அதனை தான் அவருக்கு கற்றுக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.