"ரன் எடுப்பது இருக்கட்டும் முதல்ல 50 ஓவர் முழுசா ஆடுங்க".. இந்திய அணியை விமர்சித்த முகமது கைஃப்
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை படுமோசமாகச் சரிந்ததை அடுத்து, 8வது வீரர் வரை நன்றாக பேட்டிங் செய்யும் வீரர்கள் இருந்தும் 50 ஓவர்களை முழுமையாக விளையாடாமல் சொதப்பியது ஏமாற்றமளிக்கிறது என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோருடன் 8வது வீரர் வரை இந்திய அணியின் பேட்டிங் நீண்டதாக இருந்தது. ஆனால், இந்த 3 ஆல்-ரவுண்டர்களும் இணைந்து வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சிவம் துபே தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனார். இஷான் கிஷனும் 1 ரன்னில் ஆட்டமிழந்து இருந்தார்.

விராட் கோலி 65 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்கள் எடுத்தனர். ஆனால், மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்திய அணி 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 6 ஓவர்கள் மீதமிருந்த போதே இந்தியா சுருண்டதால், ஒரு முனையில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் கொடுக்க ஆட்கள் இல்லாமல் தவித்தார்.
அடுத்து 234 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் 99 ரன்கள் உதவியால் 44.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தாலும், அவர்களை ஆல்-அவுட் செய்ய அது போதுமானதாக இல்லை. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது.
இது குறித்துப் பேசிய முகமது கைஃப், "ஒருநாள் போட்டிகளில் விளையாடும் போது, நாம் எத்தனை ரன்கள் எடுக்கிறோம் என்பது அடுத்த விஷயம், ஆனால் முதலில் 50 ஓவர்களையும் முழுமையாக விளையாட வேண்டும் என்பதைத் தான் எங்கள் காலத்து சீனியர் வீரர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடமாகும். இன்றைய காலகட்டத்தில் நாம் நீண்ட பேட்டிங் வரிசை குறித்துப் பேசுகிறோம். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் 8வது வீரர் வரை நமக்கு பேட்டிங் வரிசை இருந்தது. ஆனால், இந்திய அணி 50 ஓவர்களை முழுமையாக விளையாடாமல் ஆட்டமிழந்தது மிகப்பெரிய ஏமாற்றமாகும்" என்று விரக்தியுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications
