மும்பை: இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன் கில் , ராகுல் ஆகியோர் தான் பேட்டிங்கில் சீனியர் வீரர்களாக உள்ளனர்.இந்த நிலையில், சுப்மன் கில் பேட்டிங்கில் சோம்பேறித்தனம் படுவதாக கூறியுள்ள பாண்டிங், இந்தியாவின் பேட்டிங் வரிசை எப்படி இருக்க வேண்டும் என்று கூறி இருகிறார்.
இது குறித்து பேசிய பாண்டிங், "டெஸ்ட் கிரிக்கெட்டில் டிஃபென்ஸ் முக்கியமானது என்றாலும், கில்லின் மனநிலை மிக முக்கியம்," என்று பாண்டிங் விளக்கினார். கில்லின் டிஃபென்ஸில் தொழில்நுட்ப குறை இல்லை என்று கூறிய பாண்டிங், "சில சமயங்களில் அவர் தன்னை மிகைப்படுத்திக் கொள்கிறார் அல்லது டெஸ்ட் இன்னிங்ஸின் நடுவில் சற்று சோம்பேறித்தனமாகிறார்."

"டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு பந்துக்கும் 100 சதவீதம் அர்ப்பணிப்பு தேவை. ஆறு அல்லது ஏழு மணி நேரம் ஒவ்வொரு நாளும் முழு கவனம் தேவை. இதுதான் கில்லுக்கு சவால்," என்றார்.லீட்ஸில் நடக்கவிருக்கும் முதல் டெஸ்டில் கில்லை நான்காவது இடத்தில் தேர்வு செய்ததற்கு பாண்டிங் காரணங்களை விளக்கினார். "
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் தொடக்க வீரர்களாக இருந்தால், மூன்றாவது இடத்தில் அனுபவமுள்ள ஒருவர் தேவை. அது கேஎல் ராகுலாகவோ அல்லது கருண் நாயராகவோ இருக்கலாம். கில் நான்காவது இடத்தில் ஆடலாம். பின்னர், அவர் பழகியவுடன் மூன்றாவது இடத்திற்கு மாறலாம்," என்று பாண்டிங் கூறினார்.
சுதர்ஷனுக்கு இது டெஸ்ட் அறிமுகத்திற்கு சரியான நேரம்
ராகுலை ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக வைக்காமல், சுதர்ஷனுக்கு முதல் இடத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பாண்டிங் கூறினார். இடது கை பேட்ஸ்மேனான சுதர்ஷன், சமீபத்தில் சிறப்பான ஃபார்மில் உள்ளார்.
"சுதர்ஷனுக்கு இப்போது டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும். ரோஹித் மற்றும் விராட் இல்லாததால் இந்திய அணியில் ஒரு மறுசீரமைப்பு நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் இதைச் சந்திக்கிறது. சுதர்ஷன் தயாராக இருக்கிறார். அவரது முதல் தர கிரிக்கெட் ஃபார்ம், ஐபிஎல் ஆட்டம் ஆகியவை சிறப்பாக உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக, சுதர்ஷன் சிறப்பாக இருக்கிறார். கேஎல் ராகுல் நடு வரிசையில் ஆடினால் அணிக்கு சற்று உறுதி தன்மை கிடைக்கும்," என்று பாண்டிங் கூறினார்.