மான்செஸ்டர்: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரே ஒரு முறை தான் பேட்டிங் செய்யும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் கணித்திருக்கின்றார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தருணத்தில் மான்செஸ்டர் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இங்கிலாந்து அணி இந்தியாவை 358 ரன்களில் சுருட்டியது.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்ப ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தனர். 225 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் விளாசினார். தற்போது 128 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 523 ரன்கள் எடுத்திருக்கிறது.
இது இந்திய அணியின் ஸ்கோரை விட 165 ரன்கள் முன்னிலையாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், "இந்தப் போட்டி இந்தியா கையை விட்டு நழுவி செல்கின்றது. நேற்று இங்கிலாந்து அணி 200 ரன்களுக்கு மேல் அடித்து விட்டது. இதன் மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் நாம் ஒரே ஒரு முறை தான் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற முடிவை இங்கிலாந்து எடுத்து இருக்கலாம்."
"இதனால் தற்போது இங்கிலாந்து வீரர்கள் பெரிய அளவிலான ஸ்கோரை குவித்து வருகிறார்கள். ஏற்கனவே ஆடுகளம் கொஞ்சம் சிதலமடைந்து வருகிறது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் பேட்டிங் செய்வது கடினமாகும். இதன் காரணமாக இந்தியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்கடிக்க இங்கிலாந்து முயற்சி செய்யும்."
"மூன்றாவது நாள் முழுவதும் விளையாடிவிட்டு நான்காவது நாளில் பெரிய ஸ்கோர் அடித்துவிட்டு இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும். அதன் பிறகு இந்தியா கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்படலாம். இந்தப் போட்டியில் மீண்டும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் அதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்" என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.