மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டி வெள்ளிக்கிழமை புனே நகரில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியை வென்றால், இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும் என்பதால் சூரியகுமார் யாதவ் தலைமையிலான வீரர்கள் வெற்றிக்கு போராடுவார்கள்.
இந்த சூழலில் கடந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 ஓவர்களில் 64 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என நிலை இருந்தபோது, இந்திய அணியில் போதிய பேட்டர்ஸ் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இந்திய அணியில் இருக்கும் துருவ் ஜூரல் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சூழலில் முதல் டி20 போட்டியில் விளையாடிய ரிங்கு சிங் காயம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அவர் நான்காவது டி20 போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்டிங் பலமாக மாறி இருக்கிறது.
ரிங்கு சிங் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் நல்ல பினிஷர் என்பதால் அவர் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து கீழ் வரிசையில் விளையாடும் போது பேட்டிங் பலத்தை இந்தியாவுக்கு பல மடங்கு அது அதிகரிக்கும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோசேட், "ரிங்கு சிங் உடல் தகுதியை எட்டி இருக்கிறார். நேற்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்".
"நான்காவது டி20 போட்டியில் விளையாட ரிங்கு சிங் தயாராக இருக்கிறார்" என்று பதில் கூறினார். மேலும், துருவ் ஜூரல் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இறங்கியது ஏன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த டொசேட், "ஒரு பேட்டர் எட்டாவது இடத்தில் வருவது தான் கம்பீரின் திட்டமாக இருக்கிறது.நாம் இன்னும் துருவ் ஜூரலின் சிறந்த ஆட்டத்தை பார்க்கவில்லை".
"ஆனால் இதுபோல திறமை வாய்ந்த வீரர்களுக்கு நாங்கள் அதிக வாய்ப்புகளை கொடுக்க இருக்கின்றோம். ஏனென்றால் தற்போது சரியாக விளையாடவில்லை என்றாலும் நீண்ட கால திட்டத்திற்கு இந்த வீரர்கள் நிச்சயம் உதவுவார்கள்" என்று ரியான் டோசெட் கூறியுள்ளார். துருவ் ஜூரல் இடத்தில் ரிங்கு விளையாடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வாஷிங்டன் சுந்தர்தான் வெளியே செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.