லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் 146 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் சாதனையை அவர் முறியடித்திருக்கின்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்சால் இந்திய அணி பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. அப்போது 221 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி விளையாடிய போது களத்திற்கு பண்ட் வந்தார்.

கேப்டனும் துணை கேப்டனும் இணைந்து இங்கிலாந்து பந்துவீச்சை அபாரமாக எதிர் கொண்டு ரன்களை சேர்த்தனர். ஒரே அடியாக அதிரடி காட்டாமல் பொறுப்புடன் விளையாடி அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து, விட வேண்டிய பந்துகளை விட்டு ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக ரிஷப் பண்டை ஆட்டம் இழக்க வைக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் தடுமாறினர்.
இந்த நிலையில் பண்ட் 65 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. இதிலும் ரசிகர்களின் கண்கள் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கவனம் அனைத்தும் பண்ட் மீது தான் இருந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய பண்ட் 99 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது ரசிகர்கள் நினைத்த மாதிரியே சிக்ஸர் அடித்து தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார் பண்ட். சதம் அடித்தவுடன் வழக்கம் போல் குட்டிக்கரணம் அடித்து தன்னுடைய சதத்தை அவர் கொண்டாடினார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். தோனி ஆறு சதம் அடித்த நிலையில் பண்ட், தற்போது ஏழு சதம் அடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக பண்ட் நான்கு சதம் அடித்திருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் 3 சதம் இங்கிலாந்து மண்ணிலும், இரண்டு சதம் இந்திய மண்ணிலும் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதமும், தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு சதமும் பண்ட் அடித்துள்ளார். இதன் மூலம் பெரிய வீரர்களை அந்நிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறும் நிலையில் கடினமான ஆடுகளங்களில் ஐந்து சதங்களை அடித்து அசத்தியிருக்கின்றார். மறுமுனையில் 150 ரன்கள் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 142 ரன்களில் ஆட்டம் இழந்தார்.