லீட்ஸ்: இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட் செய்யும் ஒரு செயலைச் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரிஷப் பண்ட் சதம் அடித்திருந்தார்.
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த பிறகு, அவர் நின்றவாக்கிலேயே பல்டி அடித்து அதை கொண்டாடினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சதம் அடித்த போதும், ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரரான கவாஸ்கர் ஆகியோர் அவரைப் பல்டி அடிக்குமாறு கேட்டார்கள். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை.

இந்த நிலையில்தான் ரவிச்சந்திரன் அஸ்வின் அது குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். "தயவுசெய்து சமர்சால்ட் (பல்டி) அடிக்காதீர்கள். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நமது உடல் சோர்வடைந்து இருக்கும். ஐபிஎல் வேறு மாதிரியான ஆட்டம். அங்கு நாம் அதிகபட்சம் 50 அல்லது 60 பந்துகளுக்கு மேல் பேட்டிங் செய்ய மாட்டோம். பணிச்சுமை குறைவாக இருக்கும். ஆனால், நீங்கள் இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான பேட்ஸ்மேனாக இருக்கிறீர்கள். நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை" என அஸ்வின் சுட்டிக்காட்டினார்.
அதாவது, ரிஷப் பண்ட் தான் நல்ல உடல் தகுதியோடு இருப்பதை சுட்டிக்காட்டவே பல்டி அடிக்கிறார். ஆனால், அது அவசியம் இல்லை. யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டாம் என அஸ்வின் எச்சரித்திருக்கிறார்.
மேலும், இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் படு மோசமாகவே விளையாடியிருந்தார்கள்; சுத்தமாக ரன் சேர்க்கவில்லை. அதே சமயம், ஐந்தாம் வரிசையில் களமிறங்கி ஆடிவந்த ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் எடுத்தார்.
இதைச் சுட்டிக்காட்டி, "நான் கௌதம் கம்பீர் இடத்தில் இருந்திருந்தால், ரிஷப் பண்ட்டை அழைத்து 130 ரன்கள் அடித்தால் போதாது, 200 ரன்கள் அடிக்கும் வரை களத்தில் இருக்க வேண்டும் என்று சொல்வேன்" என்று குறிப்பிட்டார் அஸ்வின்.