லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
42 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படுவதால் இங்கிலாந்து அணி ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ரிஷப் பண்டின் பங்கு மிகவும் முக்கியமாகும். இந்த சூழலில் விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷப் பண்ட் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பந்து அவருடைய கையை பதம் பார்த்தது.
இதனால் வலியால் துடித்த பண்ட் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் அவரால் களத்தில் தொடர முடியவில்லை. இதை அடுத்து அவர் போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதனால் துருவ் ஜூரல் தற்போது இந்திய அணி விக்கெட் கீப்பராக தற்போது செயல்படுகிறார்.
இந்த சூழலில் பண்டின் காயம் எந்த அளவுக்கு சீரியஸ் ஆக இருக்கிறது என்று தெரியவில்லை. பண்ட் ஒருவேளை பேட்டிங் செய்ய வந்தாலும், அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஜூரல் திறமையான வீரராக இருந்தாலும், சிறப்பாக விளையாடுவாரா என்பது கேள்விக்குறிதான். இந்த தருணத்தில் ரிஷப் பண்ட் விரைவில் களத்திற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.