லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ஒரு முட்டாள்தனமான முடிவு எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
ரன் குவிப்புக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி முதலில் 387 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் ஜெயஸ்வால் 13 ரன்களிலும் கருண் நாயர் 40 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இந்த சூழலில் இந்திய அணி 145 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் ஆட்டத்தை தொடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். முதல் செஷனில் இருவருமே அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
வழக்கம் போல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட், பவுண்டரி, சிக்சர் என விரட்டினார். இதனால் பண்ட் 86 பந்துகளில் அரை சதம் கடந்து தொடர்ந்து சிக்சர் பவுண்டரி என அடித்ததால் அவரும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் மதிய நேர உணவு இடைவெளிக்கு முன்பு கடைசி ஓவர் வீசப்பட்டது. அப்போது ராகுல் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த தருணத்தில் ராகுல் மதிய உண்வு நேர இடைவேளைக்கு முன்பே சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக ரிஷப் பன்ட் ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தார்.
ராகுல் சதம் அடிக்க சிங்கிள் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் பந்தை அருகிலே அடித்து விட்டு ஓடினார். எனினும் அது பென் ஸ்டோக்ஸ் கையில் சிக்கியது.இதனை அடுத்து பென் ஸ்டோக்ஸ் அபாரமாக பந்தை எரிந்து ரன் அவுட் செய்தார். இதன் மூலம் பண்ட் 74 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 8 பவுண்டரிளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இதனால் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு பண்ட், தனது விக்கெட்டை பரிசாக அளித்துவிட்டு சென்றுவிட்டார். ராகுல் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக பண்ட் செய்த இந்த முட்டாள்தனம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திருக்கின்றது. தற்போது மதியநேர உணவு இடைவெளியின் போது இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கிறது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 139 ரன்கள் குறைவாகும்.