மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். இதனால் அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்யவில்லை. வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் தான் அணியின் அவர் விளையாடினார்.
இந்த சூழலில் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை நடைபெற இருக்கிறது.
இதற்கு இன்னும் காலம் இருப்பதால் அதற்குள் பண்ட் உடல் தகுதியை எட்டி விடுவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பண்டை வெறும் பேட்ஸ்மேனாக பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், நான்காவது டெஸ்டில் பண்ட் வெறும் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனென்றால் அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்யவில்லை என்றால் பில்டிங்கில் நிற்க வேண்டும். அப்படி பில்டிங்கில் நிற்கும்போது அவருடைய காயம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது.
கையில் உரை அணிந்திருந்தால் கொஞ்சமாவது பந்து பிடிக்கும் போது பாதுகாப்பாக இருக்கும். ஆனால் கிளவுஸ் இல்லாமல் பந்தை பிடிக்கும் போது அது காயத்தை மேலும் அதிகரிக்கும். எனவே அது சரியான ஒரு நடைமுறையாக இருக்காது. முதலில் பண்ட் கையில் இருப்பது எந்த விதமான காயம் என்று பார்க்க வேண்டும். எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை உடல் தகுதியை எட்டுவதற்கு ஓய்வு போதும் என்ற நிலை இருந்தால், அவரை நான்காவது டெஸ்டில் விளையாட வைக்க கூடாது. முழு ஓய்வு எடுத்துக் கொண்டு கடைசி டெஸ்டில் அவர் திரும்புவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். தற்போது நான்காவது டெஸ்டில் அவருக்கு சப்ஸ்டியூட் விக்கெட் கீப்பர் வருவதற்கான வாய்ப்பு இல்லை.
ஏனென்றால் அவருக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று நடுவர்களுக்கு தெரியும். நான்காவது டெஸ்ட் போட்டியில் பண்ட், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தான் இடம் பெற வேண்டும். ஏதேனும் ஒன்று மட்டும் தான் செய்ய முடியும் என்ற நிலை வந்தால் அவரை அணியில் சேர்க்கக்கூடாது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.