லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் வரிசை எப்படி இருக்க போகிறது என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருக்கிறது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் இளம் வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இதனால் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் பேட்டிங் வரிசையில் இடம் பிடிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து கருத்து தெரிவித்துள்ள பண்ட், கில் நான்காவது இடத்தில் களமிறங்க போகிறார் என்று தெரிவித்தார்.

ஆனால் மூன்றாவது இடத்தில் யார் விளையாடுவார் என்பது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை என்று பண்ட் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து பேசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்போது சீனியர் வீரர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பது வித்தியாசமான உணர்வாக இருந்தாலும் தற்போது பொறுப்புகள் அதிகமாகி விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இளம் வீரர்களுக்கு தங்களுடைய அனுபவம் மற்றும் கிரிக்கெட் குறித்து பகிர்ந்து அளிக்க வேண்டியது தமது கடமை என்றும் அவர் கூறினார். எனினும் களத்திற்கு சென்றவுடன் தாம் ஒரு துணை கேப்டன் அல்லது சீனியர் வீரர் என்ற நினைப்பு எல்லாம் இருக்காது என்றும் அணிக்காக சிறந்த செயல்பாடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருக்கும் என்று அவர் கூறினார்.
இதை செய்தாலே கிரிக்கெட் நம்மை பார்த்துக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது ஒரு புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ள பண்ட், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றிருப்பதால் நிச்சயம் வெற்றிடம் உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ள ரிஷப் பண்ட், எனினும் அது இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பதாக கூறியுள்ளார். வெளிநாட்டு மண்ணில் இளம் வீரர்கள் தங்களுடைய திறனை வளர்த்துக்கொள்ள சீனியர் வீரராக உதவுவதை நான் எப்போதுமே எதிர்நோக்கி பார்த்திருந்ததாகவும் வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆதரவுடன் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.