லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் விளையாடுவார் என்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அன்சுல் கம்போஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவர் விளையாடுவார் என்று கூறிய சுப்மன் கில், ஸ்பிரிட் ஆஃப் தி கேம் குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்க உள்ளது. இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்றால், இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும். அதேபோல் இதுவரை ஓல்டு டிரஃபோர்ட் மைதானத்தில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதே கிடையாது. இதனால் இந்திய அணி ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரிஷப் பண்ட், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட பலரும் காயம் அடைந்துள்ளனர். ரிஷப் பண்ட் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடந்த போட்டியில் 35 ஓவர்கள் மட்டுமே விக்கெட் கீப்பிங் செய்தார். இவருக்கு பதிலாக களமிறங்கிய துருவ் ஜுரெல், 25 ரன்கள் பைஸ் கோட்டைவிட்டார். இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மொத்தமாக மாறும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்திய இளம் வீரர் அன்சுல் கம்போஜின் திறமையை நாங்கள் அனைவரும் நன்றாக அறிவோம். அவரால் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்க முடியும்.
நாளைய போட்டியை பொறுத்தவரை அறிமுகம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிரசித் கிருஷ்ணா அல்லது அன்சுல் கம்போஜ் இருவரில் ஒருவர் கட்டாயம் விளையாடுவார். அதேபோல் நாளைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகவே களமிறங்குவார். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அதேபோல் கருண் நாயர் நன்றாகவே பேட்டிங் ஆடி வருகிறார்.
முதல் போட்டியில் அவரின் பேட்டிங் வரிசையில் விளையாடவில்லை. ஒரேயொரு அரைசதம் அடித்துவிட்டால் போதும். கருண் நாயர் சிறந்த ஃபார்முக்கு திரும்பிவிடுவர். நாளைய ஆட்டத்தில் அதனை செய்வார் என்று நம்புகிறோம். ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் இல்லையென்றாலும், இந்திய அணியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த கூடிய சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், அவர்கள் தயாராக இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக ஸ்பிரிட் ஆஃப் தி கேம் பற்றி பேச்சுகள் அதிகமாக உள்ளது. அதனை இந்த இடத்தில் பேச விரும்புகிறேன். அன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 7 நிமிடங்கள் மட்டுமே விளையாட வேண்டிய சூழல் இருந்தது. ஆனாலும் அவர்கள் கிரீஸிர்கு வருவதற்கு 90 நொடிகள் தாமதமாகியது. 10 நொடிகளோ, 20 நொடிகளோ அல்ல.. 90 நொடிகள் என்பதை மனதில் வைத்து பேசுங்கள்.
தாமதிக்கும் திட்டத்தை அனைத்து அணிகளும் செய்வார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இந்திய அணியும் அப்படிதான் செய்யும். ஆனால் அப்படி செய்யும் போது, கொஞ்சம் நியாயமாக இருக்க வேண்டும். பந்து உங்களின் மீது பட்டால் கூட உடனடியாக பிசியோவை அழைக்கலாம். ஆனால் தாமதமாக கிரீஸிற்கு வருவதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.