லீட்ஸ்: இந்திய டெஸ்ட் அணியில் யாரும் எதிர்பாராத வகையில் இடம் பிடித்த சாய் சுதர்சன் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அதேபோல, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த கருண் நாயரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து, இவர்களுக்கு இடம் அளிப்பதற்காக வாய்ப்பை இழந்த இரண்டு வீரர்களை சுட்டிக்காட்டி, "அவர்களை நீக்கியது சரியா? இவர்களுக்காகத்தான் அந்த இரண்டு பேட்ஸ்மேன்களையும் நீக்கினீர்களா?" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஓராண்டாக இடம் பிடித்து வந்த சர்பராஸ் கான் திடீரென இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு முந்தைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், எந்தக் காரணமும் இன்றி அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர் இங்கிலாந்து வந்த இந்தியா 'ஏ' அணிக்காக அபாரமாக விளையாடி இருந்தார்; ஒரு சதம் மற்றும் ஒரு முறை 90 ரன்கள் வரை எடுத்திருந்தார்.
அதேபோல, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 40 ரன்கள் எடுத்து ஒரு போட்டியில் சதம் அடித்த நிதீஷ் குமார் ரெட்டி, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் ஆல்ரவுண்டர் என்ற நிலையில், அவருக்குப் பதிலாக மற்றொரு பௌலிங் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டார்.
மேலும், பேட்டிங் வரிசையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் மூன்றாம் இடத்திலும், கருண் நாயர் ஆறாம் வரிசையிலும் பேட்டிங் செய்தனர். இவர்கள் இருவர் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இவர்கள் இருவருமே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். அதேபோல, நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அணியில் தேர்வு செய்யப்பட்ட ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, "ஏற்கனவே நன்றாக ஆடி தங்கள் திறமையை நிரூபித்த சர்பராஸ் கான் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்காதது ஏன்?" என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 471 ரன்கள் சேர்த்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பன்ட் என மூன்று நட்சத்திர வீரர்களும் சதம் அடித்தனர். அதனால் இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. அதேசமயம், பேட்டிங் வரிசையில் மற்ற வீரர்கள் யாரும் ரன் குவிக்காதது விமர்சனத்தைச் சந்தித்து இருக்கிறது.