லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது வரிசையில் கருண் நாயரை ஆட வைக்கக்கூடாது, அவர் அதற்குச் சரியான தேர்வு இல்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரரான சாய் சுதர்சனைத்தான் ஆட வைக்க வேண்டும். ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு அளித்துவிட்டு அவரை அணியிலிருந்து வெளியேற்றி இருப்பது நியாயம் அல்ல என முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறி இருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் முதல் போட்டியில் சாய் சுதர்சன் மூன்றாவது வரிசையிலும், கருண் நாயர் ஆறாவது வரிசையிலும் பேட்டிங் செய்தனர். இருவருமே முதல் போட்டியில் அதிக ரன்களை எடுக்கவில்லை.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சாய் சுதர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். கருண் நாயருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரன் குவிக்கவில்லை. இதை அடுத்து, கருண் நாயருக்காக சாய் சுதர்சனை வெளியே அமர வைப்பது நியாயம் இல்லை என சஞ்சய் மஞ்ச்ரேகர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதே சமயம், கருண் நாயருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், வேறு ஒரு வீரரை நீக்கிவிட்டு கருண் நாயரை ஆறாவது வரிசையில் பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேகர் பேசுகையில், "கடந்த போட்டியில் சில தேர்வுகள் ஆச்சரியமாக இருந்தன. அவற்றில் எனக்கு ஒப்புதல் இல்லை. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதால், அந்த தவறான முடிவுகள் மறைக்கப்பட்டு விட்டன."
"என்னை பொறுத்தவரை சாய் சுதர்சனுக்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு அளித்துவிட்டு வெளியே அமர வைப்பது சரியல்ல. அவர் இளம் வீரராக இருக்கிறார். எதிர்காலத்திற்கான ஒரு வீரராக இருக்கிறார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஓரளவு நன்றாகவே ஆடினார். எனவே, அணி நிர்வாகம் அவருடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த அணி நிர்வாகம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. வீரர்களை வெளியேற்றுவது குறித்து அவர்கள் அதிகம் யோசிப்பதில்லை."
"சாய் சுதர்சனை நான் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாயர் மூன்றாம் வரிசையில் ஆடக்கூடிய வீரர் இல்லை. ஆனால், கருண் நாயருக்கு நாம் இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும். அவர் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார் என்ற ஒரு விஷயத்துக்காகவே அவருக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்கலாம். நிதிஷ் குமாரை நீக்கிவிட்டு ஆறாம் வரிசையில் கருண் நாயரை ஆட வைக்கலாம்" என்று கூறினார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.