லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தமிழக வீர சாய் சுதர்சன் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டக் அவுட் ஆனது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. ஹெடிங்கிலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்க வீரர்கள் இருவரும் அபாரமாக விளையாடினர்.

ஒரு கட்டத்தில் பந்து ஸ்விங் ஆனது நின்றதால் இரு வீரர்களும் பவுண்டரிகளை விரட்டினார்கள். ராகுல் 8 பவுண்டரிகளை விரட்டி 78 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். ஜெய்ஸ்வாலும் 8 பவுண்டர்களை விரட்டி 74 பந்தில் 42 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த சூழலில் இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தபோது கே எல் ராகுல் கவன சிதறல் காரணமாக 42 ரன்களில் கேட்ச் ஆனார். இதை அடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் களமிறங்கினார். கவுண்டியில் விளையாடிய அனுபவத்துடன் வந்திருந்ததால் அவர் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் விராட் கோலி,டிராவிட், கங்குலி ஆகிய மூன்று வீரர்களும் இதே நாளில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள்.
சாய் சுதர்சனும், அவர்களைப் போல் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் கங்குலி முதல் டெஸ்ட்டிலே சதம் அடித்து இருந்தார். ஆனால் சாய் சுதர்சன் தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இடது பக்கம் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு விக்கெட் கீப்பரிடம் சாய் சுதர்சன் கேட்ச் ஆனார்.
டி20 கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வந்த சாய் சுதர்சன் அதே போல் ரன்கள் அடிக்கவேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆடி இருக்கிறார் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாய் சுதர்சன் டக் அவுட் ஆனவுடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் பார்த்த கம்பீர் கடுப்பானார். இதனால் இரண்டு ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.