மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம்பெற்று அசத்தியுள்ளார். 23 வயதான இந்த இடது கை பேட்ஸ்மேன், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சாய் சுதர்ஷன் தற்போது ஐபிஎல் 2025 இல் அபாரமான ஃபார்மில் உள்ளார்.
இருப்பினும், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், சுதர்ஷனின் தேர்வு அவரது ஐபிஎல் சாதனைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டது இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணி தற்போது மாற்றக் காலத்தில் உள்ளது. இவர்கள் அணியை விட்டு சென்ற நிலையில், பல இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

ஷுப்மன் கில் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுதர்ஷன் அணியின் அடுத்த தலைமுறையின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில், இந்தியா 'ஏ' போட்டிகளில் மற்றும் சர்ரேயுடனான கவுண்டி அனுபவத்தில் அவரது செயல்பாடுகள் டெஸ்ட் இடத்திற்கு அவரை வலுவான தேர்வாக ஆக்கியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஜித் அகார்கர்,"இங்கிலாந்து லயன்ஸ் அணி வந்தபோது, அவர் சிறப்பாக செயல்பட்டார். நாங்கள் அவரை ஐபிஎல் காரணமாக தேர்ந்தெடுக்கவில்லை. அவர் சரியான பாதையில் செல்கிறார், மேலும் உயர்நிலையில் வெற்றிபெறும் திறன் அவருக்கு உள்ளதாகத் தோன்றுகிறது.
நாங்கள் அவரை நீண்ட காலமாக கவனித்து வருகிறோம், ஆனால் அணியில் இடம் கிடைக்கவில்லை," என்று அகர்கர் கூறியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த பேட்ஸ்மேன், 2024-25 ரஞ்சி டிராஃபியில் 304 ரன்கள் குவித்தார். மேலும், இங்கிலாந்தில் சர்ரே அணிக்காக இரண்டு முறை ஆடிய அனுபவம் நிச்சயம் கைக் கொடுக்கும்.
சர்ரேயில் எட்டு இன்னிங்ஸ்களில் 281 ரன்கள், ஒரு சதம் உட்பட, அவர் குவித்தார். ஐபிஎல் 2025 சீசனிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 638 ரன்கள் எடுத்து, அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார்.