மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். இதன் மூலம் 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய மண்ணுக்கு வெளியே நம்பர் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய புஜாராவுக்கு பிறகு அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
சுமார் 151 பந்துகளை சாய் சுதர்சன் எதிர்கொண்டு மற்ற வீரர்களுக்கு ரன் குவிக்கும் வகையில் பந்தை பழையதாக மாற்றினார். இந்த நிலையில் ஆட்ட நேரம் முடிவடைந்த பிறகு செய்தியாளருடன் சாய் சுதர்சன் பேசினார்.

அதில் முதல் போட்டிக்கு பிறகு தாம் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் என்னுடைய கேப்டன் கில் எனக்கு முழு ஆதரவு அளித்தார். அவர் வீரர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாக சொல்லிவிடுவார். நான் ஐபிஎல் தொடரில் பார்த்த அதே கில்லை தான் இங்கேயும் பார்க்கின்றேன்.
ஆடுகளத்தின் பவுன்ஸ் கொஞ்சம் வேறுபட்டு வருகின்றது. பந்து கொஞ்சம் நகர்கிறது. இதனை பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்று சொல்ல முடியாது. நான் ஆட்டமிழந்த பந்து எவ்வாறு எட்ஜானது என்றே தெரியவில்லை. இங்கிலாந்தில் இது போல் அடிக்கடி நடக்கும். நான் இங்கு வருவதற்கு முன்பே இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு தான் வந்தேன்.
நான் அணியின் மூன்றாவது வீரராக இடம்பெறுவதை ஒரு நெருக்கடியாக கருதவில்லை. மாறாக என்னுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக தான் பார்க்கின்றேன் என்றார்.(இது நடிகர் விஜய் விழா மேடையில் பேசிய வசனம் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பேதிவிட்டுள்ளனர்) . நான் கள மற்றும் ஆட்ட சூழலுக்கு தகுந்தார் போல் விளையாட ஆசைப்படுகிறேன். அதன் மூலம் அணிக்கு என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.
தற்போது பண்ட் மிகவும் வலியில் இருக்கின்றார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது பின்பு தான் தெரியவரும். அவர் இல்லை என்றாலும் மற்ற வீரர்கள் கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவார்கள் என்று சுதர்சன் தெரிவித்துள்ளார்.