லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான சாய் சுதர்சன், தவறான கேட்சுக்கு ரிவ்யூ கேட்கச் சொல்லி கேப்டன் சுப்மன் கில்லை வற்புறுத்தினார். அதற்கு ரிவ்யூ கேட்டபோது, அது அவுட் இல்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே பேட்டிங்கில் சொதப்பிய அவர், முக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் ரிவ்யூவை வீணடித்துவிட்டார் எனப் பலரும் விமர்சித்தனர்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் அறிமுகமானார். ஏற்கனவே உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கும் அபிமன்யு ஈஸ்வரனை முந்தி, அவரை விட குறைந்த அனுபவமும், குறைந்த பேட்டிங் சராசரியும் உடைய சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
சாய் சுதர்சன் சமீபகாலமாக சிறப்பாக பேட்டிங் செய்து வருவதைச் சுட்டிக்காட்டியும், ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்ததை வைத்தும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பேட்டிங்கில் சாய் சுதர்சன் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தனது முதல் சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதனால், சாய் சுதர்சன் மீது எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 65 ரன்களும், பென் டக்கெட் 149 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிந்தன. எனினும், இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து ஆடி வந்தது. இலக்கை நெருங்கி இருந்தது.
அப்போது 56வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை பென் ஸ்டோக்ஸ் அடிக்க முயன்றார். பந்து அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சாய் சுதர்சனின் கைகளுக்குச் சென்றது. அவர் அதை கேட்ச் பிடித்தார். உடனடியாக சாய் சுதர்சன் அது அவுட் என்றார். ஆனால், பந்து பேட்டில் பட்டது போலத் தெரியவில்லை. ரவீந்திர ஜடேஜா வீசிய விதத்தால் பந்து சற்று நகர்ந்து சென்றதைப் போலத்தான் இருந்தது.
அதனால் மற்றவர்கள் ரிவ்யூ கேட்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தனர். ஆனால், சாய் சுதர்சன் மட்டுமே "இது அவுட்டுதான், பந்து பேட்டில் பட்டது" என கேப்டன் சுப்மன் கில்லிடம் ஆணித்தரமாகச் சொன்னார். அதை ஏற்று சுப்மன் கில் ரிவ்யூ செய்தார். ஆனால் ரிவ்யூவில் பந்து பேட்டில் படவில்லை எனத் தெளிவாகத் தெரிந்தது. இதைத் தொடர்ந்து சாய் சுதர்சன் முக்கியமான நேரத்தில் ஒரு ரிவ்யூவை வீணடித்துவிட்டார் என ரசிகர்கள் அவரை விமர்சித்தனர்.
அடுத்து 62வது ஓவரில் மற்றொரு ரிவ்யூவை கேப்டன் சுப்மன் கில் வீணடித்தார். அப்போதும் ஜடேஜா வீசிய ஓவரில் தான் இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது ஜோ ரூட் அந்த பந்தை சந்தித்தார். பந்து அவரது காலில் பட்டது. எனவே எல்.பி.டபிள்யூ என நினைத்து இந்திய அணி அவுட் கேட்டது. அம்பயர் அவுட் கொடுக்க மறுத்ததால், சுப்மன் கில் உடனடியாக ரிவ்யூ செய்தார். ஆனால், பந்து ஸ்டம்பில் படவில்லை. மாறாக, ஸ்டம்புக்கு மேலே சென்றது. அதனால் அந்த ரிவ்யூவும் வீணானது. அத்துடன் இந்திய அணியின் அனைத்து ரிவ்யூக்களும் முடிந்தன.