லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் முன் சாய் சுதர்சன் சில உத்திகளைக் கடைப்பிடித்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களையும் எடுத்திருந்தன. அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கியிருந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் பேட்டிங் செய்து வந்தனர்.
அப்போது மூன்றாம் வரிசையில் இறங்க வேண்டிய சாய் சுதர்சன் ஓய்வறைக்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது பந்தை கையில் வைத்து அதை மேலே, கீழே மற்றும் இடது புறம், வலது புறம் என அசைத்தபடி அதை உற்றுப்பார்த்து வந்தார். இதன் மூலம் தான் பேட்டிங் செய்ய செல்லும்போது பந்தை உற்று கவனித்து பேட்டிங் செய்வதற்கு உதவும் என்ற வகையில் இந்த உத்தியை அவர் செய்து வந்தார். இது நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட்டது.

மேலும், அவர் அப்போது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் சில உத்திகளை ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக்கொண்டு இருந்தார். இவ்வாறு பல்வேறு உத்திகளையும் கடைப்பிடித்த சாய் சுதர்சன் அடுத்து பேட்டிங் செய்தபோது 30 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார்.
இதை அடுத்து "இவ்வளவு விஷயங்களையும் செய்து பில்டப்பை ஏற்றிவிட்டு வெறும் 30 ரன்கள் மட்டும் அடிக்கிறாரே, எதற்காக இதுபோன்ற வேலை எல்லாம் செய்ய வேண்டும்?" என ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக விமர்சித்து வந்தனர்.
இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் சாய் சுதர்சன், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதுவும் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்தார். லெக் சைடில் அவருக்கு பந்து வீசப்பட்ட போது அதை அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய காத்துக் கொண்டு இருக்கிறார். எனவே, சாய் சுதர்சன் நிலை கேள்விக் குறியாகி இருக்கிறது.