IND vs ENG: வைபவ் சூர்யவன்ஷி எங்களிடம் அறிமுகமாக வேண்டாம்.. இங்கிலாந்து வீரர் சாம் கரண் கலகல
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் நகைச்சுவையாக தெரிவித்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ் சூரியவன்ஷி 15 வயதிலேயே இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கிறார்.
எனினும் அவர் இன்னும் முதல் சர்வதேச போட்டியில் விளையாட வில்லை. இந்த நிலையில் வைபவ் சூரியவன்ஷியின் வளர்ச்சியை பாராட்டியுள்ள ஷாம்கரன், அவரது இந்த பயணம் சிறப்பு மிக்கது என்று கூறியுள்ளார். தற்போது இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் இடம் பெற்றுள்ள நிலையில், அவரது சர்வதேச அறிமுகத்திற்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

மான்செஸ்டரில் 2வது டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சாம் கர்ரன், "நிச்சயமாக இது ஒரு நம்ப முடியாத கதை. நான் ஐபிஎல் போட்டிகளைப் பார்த்தபோது, இந்த இளம் வீரரின் பேட்டிங் மிகவும் எளிதாக இருந்தது. அவருக்குக் கிடைக்கும் கவனம் முற்றிலும் தகுதியானது தான்" என்று கர்ரன் கூறினார்.
"அவர் மிகவும் எதார்த்தமாகவும், தனது வாழ்வின் மிகச் சிறந்த தருணத்தை அனுபவித்தும் விளையாடி வருகிறார். 15 வயதில் இந்திய அணிக்காக விளையாடுவது என்பது ஒரு மிகச்சிறந்த விஷயம். ஒரு எதிரணியாக இருந்தாலும், அவரது திறமையை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். நான் 15 வயதாக இருந்தபோது சர்ரே உள்விளையாட்டு அரங்கில் பந்துகளைத் தட்டிக்கொண்டு தான் இருந்தேன்" என்று கூறினார்.
"இங்கிலாந்து ஆடுகளங்கள் இந்தியாவை விட மெதுவானவை. இது அவருக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும். இங்கு ஒவ்வொரு அணியும் தங்களுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படும். எங்களிடமும் அவருக்கென்று சில திட்டங்கள் உள்ளன. அவை சரியாக அமையுமா என்று இப்போதே கூறிவிட முடியாது, ஏனென்றால் அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். என்னைப் பொறுத்தவரை நான் எனது திறமைகளைச் சரியாகப் பயன்படுத்த முயல்வேன். ஆனால் அவர் செய்து வரும் காரியங்கள் உண்மையில் ஸ்பெஷலானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கர்ரன் கூறினார்.
மைதானத்திற்கு வெளியே இருக்கும் அழுத்தங்களை வைபவ் எவ்வாறு கையாளப் போகிறார் என்பது குறித்தும் கர்ரன் சில ஆலோசனைகளை வழங்கினார். "இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அந்தப் புகழை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதுதான் அவரது மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவர் ஓரிரு ஐபிஎல் சீசன்களை மட்டுமே விளையாடிவிட்டு, தற்போது நேரடியாக இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவ அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் உடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
இறுதியாக, வைபவ் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று வாழ்த்திய கர்ரன், "அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது ஆட்டத்தை ரசித்துப் பார்க்க ஆவலாக உள்ளேன். ஆனால், அது எனது பந்துவீச்சிலோ அல்லது எங்கள் அணிக்கு எதிராகவோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

