மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நான்காவது டெஸ்ட் போட்டியில் "கெட்ட பையனைப் போல" நடந்து கொண்டார் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சதம் அடிப்பதற்காக, கடைசி நேரத்தில் போட்டியை டிரா செய்ய ஒப்புக்கொள்ளாததுதான் பென் ஸ்டோக்ஸின் அதிருப்திக்குக் காரணமாக இருந்தது.
இந்தச் சாதாரண விஷயத்துக்காக பென் ஸ்டோக்ஸ் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொண்டார் என்றும், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரை வெறுப்பேற்றும் வகையில் தொடர்ந்து சீண்டிப் பேசியதாகவும் மஞ்ச்ரேகர் குற்றம்சாட்டினார். இங்கிலாந்து வீரர்களும் அதேபோன்று நடந்துகொண்டனர்.

இந்தப் போட்டியில் ஐந்தாவது நாள் ஆட்டத்தில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. அப்போது இந்திய அணி 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்தது. ஐந்தாவது நாளில் இன்னும் 14 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், போட்டி எப்படியும் டிராவில் தான் முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ் போட்டியை டிரா செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக அதை மறுத்தனர்.
அதனால், பென் ஸ்டோக்ஸ் தனது முக்கியப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தாமல், ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் போன்ற பகுதி நேரப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். மேலும், "இவர்கள் பந்தில் தான் நீங்கள் சதம் அடிக்கப் போகிறீர்களா?" என ஜடேஜாவை வெறுப்பேற்றும் வகையில் பேசினார். அதாவது, முக்கியப் பந்துவீச்சாளர்கள் பந்தில் சதம் அடிக்காமல், பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள் பந்தில் சதம் அடிப்பது மோசமானது என்கிற ரீதியில் இவ்வாறு பேசினார்.
இது தேவையற்ற பேச்சு எனவும், பென் ஸ்டோக்ஸ் ஒரு கெட்ட பையனைப் போல நடந்துகொண்டார் எனவும் சஞ்சய் மஞ்ச்ரேகர் விமர்சனம் செய்துள்ளார். மேலும், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட், "இங்கிலாந்து அணி அந்த இடத்தில் இருந்தால், போட்டியை முடித்துக்கொண்டு டிரா செய்து வெளியேறி இருப்பார்கள்" என்று சொன்னார். அதற்கும் சஞ்சய் மஞ்ச்ரேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி சஞ்சய் மஞ்ச்ரேகர் பேசியதாவது: "ஜொனாதன் ட்ராட் இந்திய அணியின் நிலைமையில் இருந்து இருந்தால், பென் ஸ்டோக்ஸ் ஆடுகளத்தை விட்டு வெளியேறி இருப்பார் என்று நான் உறுதியாகச் சொல்வேன். ஒருவேளை அது கலாச்சார ரீதியான வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அப்போது என்ன நடந்திருக்கும் என யாருக்கும் தெரியாது. நாம் அதைக் கற்பனை செய்துதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஒருவேளை ஜொனாதன் ட்ராட் சொன்னது உண்மை என்றால், இந்திய வீரர்கள் போட்டியை முடித்து வெளியேறாததற்கு பென் ஸ்டோக்ஸ் அதிருப்தியடைந்தார் என்பதை நாம் சரி என எடுத்துக்கொள்ளலாம்.
"இங்கிலாந்து அணியின் முக்கியப் பந்துவீச்சாளர்கள் களைத்துப் போய் இருந்ததால், அவர்களைப் பக்குவமாகப் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால், அதற்காகக் கடைசி நேரத்தில் இந்திய வீரர்களுக்கு விரைவாக ரன்களைக் குவிக்க உதவும் வகையில் பந்துவீசியதும், அவர்களிடம் முகத்தைக் காண்பித்து வெறுப்பேற்றியதும் என பென் ஸ்டோக்ஸ் நடந்துகொண்ட விதம், ஒரு கெட்ட பையனைப் போல இருந்தது. அவர் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்ய நினைத்ததை விரும்பாமல் இருந்திருக்கலாம். ஆனால், எல்லாமே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடக்காது. அவர் இந்த விஷயத்தை இன்னும் நன்றாகக் கையாண்டிருக்க வேண்டும். பென் ஸ்டோக்ஸ் ஒரு ஹீரோ, ஒரு சாம்பியன். அவர் அந்த நேரத்தில் கெட்ட பையனைப் போல நடந்துகொண்டதுதான் மோசமாக இருந்தது" என்று சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியிருக்கிறார்.