லீட்ஸ்: இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் இருக்கக் கூடாது எனத் தான் அதற்கு எதிராக இருந்ததாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து கூறியிருந்தார். ஆனால், இப்போது அவர் சதம் அடித்து தனது முதல் கேப்டன்சி போட்டியிலேயே சாதித்திருக்கிறார். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியும் வலுவான நிலையில் இருக்கிறது. இந்த இடத்தில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 'பல்டி' அடித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் சதம் அடித்தனர். சுப்மன் கில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதை அடுத்துப் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "நான் சுப்மன் கில் கேப்டன் ஆவதற்கு எதிராக இருந்தேன். ஏனெனில், பும்ராதான் இந்திய அணிக்குச் சிறந்த கேப்டனாக இருப்பார் என நான் நினைத்தேன். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் எடுத்த முடிவு என்பதால், அது சரியான முடிவு அல்ல என்று நினைத்தேன்."
"ஆனால், சுப்மன் கில் கேப்டனாகத் தோல்வி அடைவாரா? நிச்சயம் இல்லை. ஒரு கேப்டனாக அவர் பதற்றத்துடன் இல்லை; அது அவரது பேட்டிங்கை பாதிக்கவில்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். வெளிநாட்டுத் தொடர்களில் அவர் தொடர்ந்து தன்னை முன்னேற்றிக் கொள்வாரா என்பதே கேள்வியாக இருந்தது."
"மேலும், கேப்டன் என்ற அழுத்தம் அவருக்கு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அவர் இதற்கு முன் வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவில் ரன் குவிக்காதவராக இருந்தார். ஆனால், இன்று அனைத்தும் அவருக்குச் சாதகமாக இருந்த நிலையில் அவர் சதம் அடித்து இருக்கிறார்" என்றார். கில் சதம் அடித்த உடன் அவர் கேப்டனாக சாதிப்பார் என பேசி இருக்கிறார் மஞ்ச்ரேக்கர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து இருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் மேலும் ரன் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.