இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் கடும் சவால்களை அளிக்கக் கூடியதாக இந்திய அணிக்கு இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வியை தழுவிய நிலையில் இந்திய அணி, தற்போது டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர்,ஆஸ்திரேலியா தொடரில் பயிற்சியாளர் கம்பீர் கடும் அழுத்தத்திற்கு ஆளானார்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் கொஞ்சம் செட்டில் ஆக உணர்வார். அவருக்கு பெரிய அளவு அழுத்தம் இருக்காது. இந்த தொடரில் பல இளம் வீரர்கள் இருப்பதால் கொஞ்சம் சுலபமாக இருக்கலாம். எனினும் இந்த போட்டிகளை வெல்வது என்பது கம்பீருக்கு மிகவும் முக்கியம். ஆனால் இங்கிலாந்து அணி பலமான வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறது.
எனவே இந்தியாவின் செயல்பாடுகளை குலைக்கும் விதமாக இங்கிலாந்து விளையாடலாம். எனவே சாம்பியன்ஸ் தொடருக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20, ஒருநாள் தொடர் என்பது கம்பிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கிலாந்து அணியில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை உள்ள வீரர்களை பாருங்கள். அவர்கள் பலமான அணியாக இருக்கிறார்கள்.
போட்டியை தனியாளாக மாற்றக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். அந்த அணியில் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்கள் பேட்டிங் மற்றும் சுழற் பந்து வீச்சு என இரண்டிலும் பட்டையை கிளப்புவார். எனவே பேப்பரில் பார்க்கும்போது இங்கிலாந்து அணி பலமான அணியாகவே தெரிகிறது.
இதனால் தான் சொல்கின்றேன் தற்போது இருக்கும் இந்திய டி20 அணிக்கு இது ஒரு நல்ல பரிட்சையாகும். தங்களுக்கு பலமான ஒரு அணியுடன் இந்திய வீரர்கள் விளையாட போகிறார்கள் என சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் கம்பீர் பயிற்சியாளராக சொதப்பினாலும் டி20 தொடரில் அவர் இலங்கைக்கு எதிராகவும் வங்கதேசத்துக்கு எதிராகவும் முழுமையாக போட்டிகளை வென்று அசத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.