மும்பை: டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரை சதம் அடைத்திருக்கிறார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது வான்கடே மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருக்கும் என்பதால் 200 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கும்.

ஏனென்றால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமான சூழல் நிலவும். இதனால் இந்திய அணி வீரர்கள் அதிரடி காட்டி ரன்களை சேர்க்க கடும் முயற்சி செய்தனர். எனினும் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா ஏழு பந்துகளுக்கு எதிர்கொண்டு வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார். எனினும் இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் மீண்டும் இந்த ஆட்டத்தில் அதிரடி காட்டினார்.

சிக்ஸர், பவுண்டரி என பறக்க விட்ட சஞ்சு சாம்சன், தனி ஆளாக அணியை சரிவில் இருந்து மிட்டார். இதேபோன்று இசான் கிஷன் அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்து அதிரடி காட்டினார். இதனால் சஞ்சு சாம்சனின் பணி ஏதுவாக மாறியது. இந்த போட்டியின் 2.2 வது ஓவரில் சாம்சன் கொடுத்த ஒரு கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் மிஸ் செய்ய, இது அவருக்கு ஒரு லைப்பாக மாறியது.

அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அசித்தினார். இதில் ஏழு பவுண்டரிகளும், மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும். சாம்சனின் இந்த பேட்டிங்கை பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அவர் அடித்த ஆட்டம் அவருடைய நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. அதனை நாம் கண்முன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சூப்பரான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று பாராட்டியுள்ளார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாம்சன் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இதில் 8 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடங்கும்.