ராஜ்கோட்: இந்திய டி20 அணியில் துவக்க வீரராக இடம் பெற்று இருக்கும் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை எதிர்கொள்ள வேண்டி சிறப்பு பயிற்சி ஒன்றை செய்து வருகிறார். கடந்த இரண்டு போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் அதிக அளவில் ரன் குவிக்கவில்லை.
அதை சரி செய்யவே தற்போது அவர் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் ஆடி வரும் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளன. அந்த முதல் இரண்டு போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் 26 ரன்கள் மற்றும் 5 ரன்கள் எடுத்து இருந்தார்.

இந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சை சந்திக்க திணறிய சஞ்சு சாம்சன் அவரது பந்து வீச்சிலேயே இரண்டு முறையும் ஆட்டம் இழந்து இருந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசும் அதிக பவுன்ஸ் உடைய பந்துகள் மற்றும் ஃபுல் லென்த் பந்துகளை எதிர்கொள்வதில் சஞ்சு சாம்சனுக்கு சிரமம் உள்ளது.
அது போன்ற பந்துகளில் ஷாட் அடிக்க முயன்று தான் சாம்சன் ஆட்டம் இழந்து இருந்தார். அதை சரி செய்ய முடிவு செய்த அவர் வலைப் பயிற்சியில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் மற்றும் ஒரு த்ரோடவுன் உதவியாளருடன் சுமார் 45 நிமிடங்கள் பயிற்சி செய்தார். இதில் முக்கியமான விஷயம் அவர் பிளாஸ்டிக் பந்தை வைத்து பயிற்சி செய்தார் என்பது தான்.
அது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பிளாஸ்டிக் பந்துகள் அதிக வேகத்தில் வீசப்படும் என்பதால் ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்துக்கு இணையாக த்ரோடவுனில் வேகத்தை கூட்டுவதற்கு இந்த பிளாஸ்டிக் பந்தை சஞ்சு சாம்சன் பயன்படுத்தி இருக்கிறார்.
அந்த 45 நிமிட வலைப் பயிற்சியில் அதிக பவுன்ஸ் மற்றும் ஃபுல் லென்த் பந்துகளை வீசச் செய்து அதில் புல் ஷாட் மற்றும் ஹுக் ஷாட் அடிக்க பயிற்சி செய்தார் சஞ்சு சாம்சன். மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் இந்த பயிற்சியின் மூலம் அதிக ரன்கள் குவிப்பாரா? என்று பார்க்கலாம்.