மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து சர்பராஸ் கான் மற்றும் ரஜத் பட்டிதர் இருவரும் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றியை பெற்றுள்ளன. இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு சிறு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் 2 நாட்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது. அதன்பின் பிப்.13ஆம் தேதி முதல் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ராஜ்கோட்டில் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. டெஸ்ட் தொடர் சமநிலையில் இருப்பதால், அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணியின் அனைத்து சீனியர் வீரர்களும் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
சொந்த காரணங்களால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஈடுபட்ட விராட் கோலி கடைசி நேரத்தில் விலகினார். அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் குடும்பத்தினருடன் இருக்கவும், குழந்தையுடன் நேரம் செலவிடவும் விராட் கோலி இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவர் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் முதல் குழந்தை பிறந்த போதும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடிய பின்னரே மீண்டும் இந்தியாவுக்கு திரும்பினார். இதனால் விராட் கோலி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் கேஎல் ராகுல்காயம் காரணமாக என்சிஏவில் உள்ள நிலையில், 3வது டெஸ்ட் போட்டிக்கு முன் முழு ஃபிட்னஸை எட்டுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் இரு சீனியர் வீரர்களும் கம்பேக் கொடுப்பார்கள் என்ற நம்பப்படுகிறது.
இதன் காரணமாக இந்திய அணியின் இளம் வீரர்களான ரஜத் பட்டிதர் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் சிராஜ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதால் ஆவேஷ் கான் வெளியேறுவார். இதனால் ஜடேஜாவை தவிர்த்து சீனியர் வீரர்கள் அனைவரும் 3வது டெஸ்ட் போட்டிக்கு திரும்புவார்கள் என்று கருதப்படுகிறது.