ராஜ்கோட் : அறிமுக டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களில் அரைசதம் விளாசிய இந்திய இளம் வீரர் சர்பராஸ் கான் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் வீரர் சர்பராஸ் கான் அறிமுகம் செய்யப்பட்டார். அனில் கும்ப்ளே அளித்த டெஸ்ட் கேப்பை பெற்றுக் கொண்டு தனது தந்தையிடம் கொடுத்த போது, அதற்கு முத்தம் கொடுத்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நெளஷத் கான். இதனை தொடர்ந்து சர்பராஸ் கான் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதனை தொடர்ந்து அறிமுக போட்டியில் களமிறங்கிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் அரைசதம் அடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் அதிரடியாக ஆடி வந்த சர்பராஸ் கான், 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஜடேஜா சொந்த சாதனையை படைப்பதற்காக, சர்பராஸ் கானின் விக்கெட்டை தாரை வார்த்தார்.
அதுமட்டுமல்லாமல் அறிமுக வீரரின் விக்கெட் வீழ்த்தப்பட்டதற்காக கேப்டன் ரோகித் சர்மா தொப்பியை கழற்றிவிசி கொந்தளித்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 72 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 68 ரன்களை சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை சர்பராஸ் கான் படைத்துள்ளார். இவருக்கு முன்பாக 1934ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான இந்திய வீரர் திலாஹர் ஹுசைன் முதல் இன்னிங்ஸில் 59 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்களும் சேர்த்திருந்தார்.
அதேபோல் 1971ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான சுனில் கவாஸ்கர் முதல் இன்னிங்ஸில் 65 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 67* ரன்களும் சேர்த்தார். 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் 105 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 65 ரன்களும் சேர்த்தார். தற்போது சர்பராஸ் கான் முதல் இன்னிங்ஸில் 62 மற்றும் 2வது இன்னிங்ஸில் 68* ரன்களும் சேர்த்துள்ளார்.