மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் இடம் உறுதி என பலரும் நினைத்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக கருண் நாயர் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
கருண் நாயரின் தேர்வை பலரும் பாராட்டினாலும், சர்பராஸ் கான் எதற்காக நீக்கப்பட்டார் என அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்து வந்ததால், கடந்த ஆண்டு சர்பராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால், அடுத்த நடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் சர்ச்சை:
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, ஓய்வறையில் இருக்கும் ரகசியங்களை ஒரு வீரர் பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. அது சர்பராஸ் கான் தான் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. அந்த விஷயத்தில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவர் மீது அதிருப்தி அடைந்ததாக அப்போதே கூறப்பட்டது.
அதன் பிறகு சர்பராஸ் கான் காயமடைந்ததன் காரணமாக ரஞ்சி டிராபியில் சில போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது அவர் காயத்திலிருந்து குணமடைந்து விட்டார். மேலும், தனது உடல் எடையையும் குறைத்து இருக்கிறார். இந்திய அணியில் பங்கேற்க வேண்டும் என்ற உறுதியுடன் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், தற்போது அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நடந்த சம்பவங்கள் தான் காரணமா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. வரும் நாட்களில் இது நிச்சயம் விவாதப் பொருளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
சுப்மல் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட்( துணை கேப்டன் / விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜூரல், ஆகாஷ் தீப்