மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் குறைகளைச் சுட்டிக்காட்டி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய அணி பலமான அணியாக இருந்தாலும், அவர்களை வீழ்த்தவது சாத்தியமே என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய அணி ஒரு சிறப்பான அணி என்றாலும், அவர்களை வீழ்த்தவே முடியாது என்று கூற முடியாது என மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "அரையிறுதிக்குத் தகுதி பெற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிக நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. ஆனால் அவர்களை வீழ்த்த முடியாத அணி என்று நான் கருதவில்லை.

இந்திய அணியில் ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சில் சில குறைகள் உள்ளன. முக்கியமாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பி இந்திய அணி களமிறங்குகிறது. எதிரணி வீரர்கள் ஒன்று அல்லது இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்களைத் தாக்கத் தொடங்கினால், அதைச் சமாளிக்கக் கூடுதல் பந்துவீச்சாளர் என்ற ஒரு மாற்றுத் திட்டம் அவர்களிடம் இல்லை. அதேபோல அணியில் உள்ள சில பேட்ஸ்மேன்களும் தங்களது சிறந்த ஃபார்மில் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ஃபில் சால்ட் ஆகியோர் நடப்புத் தொடரில் தொடர்ந்து ரன் குவிக்கத் தடுமாறி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடப்புத் தொடரில் இருநூறு ரன்களைக் கூட தாண்டவில்லை. குறிப்பாக பட்லர் ஏழு இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சால்ட் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இவர்கள் இருவரும்தான் இங்கிலாந்து அணியின் முக்கிய பலமாகப் பார்க்கப்பட்டார்கள். ஆனால் தங்களது முக்கிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், அந்த அணி வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த விஷயம் இங்கிலாந்து வீரர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கும் என்று மைக்கேல் ஆதர்டன் சுட்டிக்காட்டினார்.

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவும் இங்கிலாந்தும் நேருக்கு நேர் மோதுவது இது தொடர்ந்து மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களிலும் இரு அணிகளும் அரையிறுதியில் மோதியுள்ளன.
இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் இங்கிலாந்து வீரர்கள் தங்களது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஆதர்டன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவுமே மோதும் என்று தான் கருதுவதாகவும், இது கடந்த 2024ஆம் ஆண்டு இறுதிப்போட்டியைப் போலவே இருக்கும் என்றும் அவர் தனது கணிப்பைக் கூறியுள்ளார்.
