மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பலவீனம் ஒன்று பெரும் கவலையளிப்பதாக முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் பார்த்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார். அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் எனவும் அவர் எச்சரித்து இருக்கிறார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், ஃபீல்டிங்கில் பல முக்கிய கேட்சுகளைத் தவறவிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நடப்புத் தொடரில் இதுவரை 13 கேட்சுகளைத் தவறவிட்டுள்ளது. இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் 72.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது இந்தத் தொடரிலேயே மிகக் குறைவான பதிவாகும். அதேசமயம் ஃபீல்டிங்கிற்கு அதிகம் விமர்சிக்கப்படும் பாகிஸ்தான் அணி கூட 83.3 சதவீதத்துடன் இந்தியாவை விடச் சிறப்பான நிலையில் உள்ளது.
இது குறித்துப் பேசிய பார்த்திவ் பட்டேல், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே ஃபீல்டிங்கில் இந்தச் சிக்கல் உள்ளது. நாம் தொடர்ந்து கேட்சுகளைக் கோட்டை விடுகிறோம். இந்திய அணி இதில் கட்டாயம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் மட்டுமல்ல, தொடர் முழுவதுமே இந்த ஃபீல்டிங் சறுக்கல்கள் நடந்துள்ளன" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் 190 ரன்களுக்கு மேல் இலக்கைத் துரத்தி இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து பார்த்திவ் பட்டேல் பாராட்டினார். இந்த வெற்றி அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது எனக் கூறிய அவர், "பனிப்பொழிவு இருக்கும் என நினைத்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தோம், ஆனால் ஆட்டத்தின் முடிவில் பனிப்பொழிவு இல்லை. இப்படியான ஒரு கடினமான நாக் அவுட் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடினார்.
திறமை அளவில் சாம்சன் சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனதளவில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதே சவால். அந்த நெருக்கடியைச் சாம்சன் சிறப்பாகக் கையாண்டார். அவர் பந்தை மிகவும் கடினமாக அடிக்க முயற்சிக்கவில்லை. ஆட்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இது ஒரு மிகச் சிறந்த முதிர்ச்சியான இன்னிங்ஸ்" என்று பாராட்டினார்.

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் செயல்பாட்டையும் பார்த்திவ் பட்டேல் வெகுவாகப் பாராட்டினார். "பும்ரா எப்போதுமே நம்பிக்கையின் மறுஉருவம். ஃபார்மில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஹெட்மையர் மற்றும் நிதானமாக ரன் சேர்த்த ரோஸ்டன் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகள் தேவைப்பட்ட முக்கியமான நேரத்தில், பும்ரா சரியாக வந்து பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். தற்போதைய கிரிக்கெட் காலகட்டத்தில் ஒரு பேட்ஸ்மேனை ரன் அடிக்காமல் தடுக்க ஒரே வழி அவரை அவுட் ஆக்குவதுதான். அதை பும்ரா இந்திய அணிக்காகத் தொடர்ந்து மிகச் சரியாகச் செய்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.

அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது குறித்துப் பேசிய பார்த்திவ் பட்டேல், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "இங்கிலாந்து அணியின் ஆபத்தான பேட்ஸ்மேன்களை இந்திய அணி விரைவாக வெளியேற்ற வேண்டும். ஃபில் சால்ட் மற்றும் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட விரும்பும் ஜோஸ் பட்லர் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் என ஒரு பலமான அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. எனவே, அந்த அணிக்கு எதிராக இந்தியா தனது ஆட்டத்திறனில் மிகச் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்" என்று பார்த்திவ் பட்டேல் கூறினார்.