மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் இந்தப் போட்டிக்காக இரு அணி ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மைதானத்தில் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என்று இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். மைதானத்தில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்களைத் தங்களது ஆட்டத்தின் மூலம் அமைதியாக்குவதை விட சிறந்த உணர்வு வேறு ஏதும் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
அதே பாணியில் தற்போது இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனும் பேசியுள்ளார். நடப்புத் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாம் கர்ரன், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மட்டுமே தனது ஒரே நோக்கம் என்று கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய சாம் கர்ரன், "இலங்கையிலிருந்து மும்பைக்குப் பயணம் செய்யும் போது, எனது சிறுவயது கனவுகள் குறித்தும், கிரிக்கெட்டில் நான் எதைச் சாதிக்க விரும்புகிறேன் என்பது குறித்தும் சிந்தித்துப் பார்த்தேன். இந்தியாவில் வைத்து இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டும் என்பது அந்தக் கனவுகளில் முதன்மையானது. இது ஒரு மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும்.
வான்கடே மைதானத்தில் ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருக்கும். அதனை நாங்கள் ஒரு சிறந்த வாய்ப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மைதானத்தில் உள்ள ரசிகர்கள் அமைதியானால், இங்கிலாந்து அணி சிறப்பாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். அந்த நேர்மறையான எண்ணத்துடன்தான் நாங்கள் களமிறங்குவோம்," என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்களுக்கு உள்ள ஒரு மிகப்பெரிய சாதகமான விஷயம் என்னவென்றால், நாங்கள் இந்தியாவில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளோம். இங்குள்ள மைதானங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடப் பழகிக் கொண்டோம். எப்போது ரசிகர்களின் சத்தத்தைக் காதில் வாங்காமல் விளையாட வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அரையிறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும்.
மைதானம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், ரசிகர்கள் பெருமளவில் சத்தமிட்டு ஆதரவளிப்பார்கள் என்பது உறுதி. இரண்டு சிறந்த அணிகள் மோதும் இந்தப் போட்டிக்காகத்தான் கடந்த ஒரு மாதமாக நாங்கள் காத்திருந்தோம். இறுதிப் போட்டிக்குச் செல்ல நாங்கள் இன்னும் ஒரு அடி மட்டுமே எடுத்து வைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, இந்த அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் மோதும் தென்னாப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து அணிகளில் ஒன்றை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.