மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக மும்பை சென்றடைந்த இந்திய அணி, செவ்வாய்க்கிழமை பயிற்சியைத் தொடங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்திய அணியின் பயிற்சி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் தங்களது பயிற்சியைத் தொடங்க திட்டமிட்டிருந்தது. ஆனால் சந்திர கிரகணம் காரணமாக இந்தப் பயிற்சி சுமார் ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது. சந்திர கிரகண நேரத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இந்தியாவில் பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதால், நல்ல நேரத்தில் பயிற்சியைத் தொடங்க வேண்டும் என இந்திய அணியினர் கருதியுள்ளனர்.

சந்திர கிரகணம் முடியும் நேரமான 6:40 மணி வரை எந்தவொரு புதிய செயலையும் தொடங்க வேண்டாம் என அணியின் தரப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அணி நிர்வாகமும் ஒப்புக்கொண்டதால், பயிற்சி ஒரு மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை மும்பையில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது மட்டுமே ஒரே பின்னடைவாக இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி நாக் அவுட் போட்டி என்பதால் இந்திய அணி தனது முழு பலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள், வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.