லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா எதிர்கொள்ள தயாராக உள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இங்கிலாந்து ஆடுகளத்தில் எப்போதும் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்.
சர்துல் தாக்கூர் ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்கப்படாத நிலையில், அந்த பணியை நிதிஷ் குமார் ரெட்டி மேற்கொண்டார். தற்போது சர்துல் தாக்கூர் நல்ல பார்மில் இருப்பதால், யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் இருக்கிறது.

இந்த சூழலில், ஷர்துல் தாக்கூர், 2021-22 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "2021 தொடர், நாங்கள் இரண்டு போட்டிகளில் வென்றோம். முதல் போட்டியிலும் வெற்றி பெற வாய்ப்பிருந்தது, ஆனால் கடைசி நாளில் மழை பெய்ததால் இலக்கை துரத்த முடியவில்லை. ஆனால், லார்ட்ஸில் வென்றோம், பின்னர் ஓவலில் வென்றோம்."
"அடுத்த ஆண்டு ஐந்தாவது டெஸ்டுக்கு திரும்பினோம். தொடர் சமநிலையில் முடிந்தது, ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் ஒன்று, நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் தொடர்களில் ஒன்று.
இங்கிலாந்தில் உள்ள சவால்களை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் உற்சாகமாக உள்ளது."
"முதல் சவால் நிச்சயமாக வானிலை. சில சமயங்களில் மேகமூட்டமாக இருக்கும், சில சமயங்களில் பிரகாசமான வெயிலாக இருக்கும். வீரராக, நீங்கள் பேட்டிங் செய்யும்போதோ அல்லது பந்து வீசும்போதோ இதற்கு ஏற்ப உங்கள் ஆட்டத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும்,"
"அணியில் புதிய வீரர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில இளம் வீரர்கள் உருவாகி வருகின்றனர். புதிய திறமைகள் எப்போதும் உற்சாகமளிக்கின்றன. இங்கிலாந்து அணியும் இப்போது வித்தியாசமான கிரிக்கெட் விளையாடுகிறது. நாங்களும் அவர்களை ஆச்சரியப்படுத்த விரும்புகிறோம்."
"நாங்கள் இங்கு சிறப்பாக ஆட வந்திருக்கிறோம். வெளிநாட்டு தொடரில் வெல்வது எப்போதும் ஸ்பெசலானது. இந்த சாதனையை நாம் அடைய முடிந்தால், அது முழு நாட்டுக்கும் மிகப்பெரியதாக இருக்கும்," என்று ஷர்துல் தெரிவித்தார்.
இது ஷர்துலின் இரண்டாவது இங்கிலாந்து சுற்றுப்பயணம். அவரது முதல் சுற்றுப்பயணம் 2021-22 இல் இருந்தது, அப்போது ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன. நாட்டிங்ஹாமில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து ஐந்தாவது போட்டியை 7 விக்கெட்டுகளால் வென்று தொடரை சமநிலையில் முடித்தது.