லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முக்கியமான கட்டத்தில் இந்திய வீரர் சர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தங்களது கடைசி இன்னிங்ஸில் களமிறங்கியது. விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது.

இதனால் போட்டி எவ்வாறு முடியும் என ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி மற்றும் பெண் டக்கட் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பென் டக்கட் ஏதோ ஒரு நாள் கிரிக்கெட்டின் விளையாடியது போல் பவுண்டரிகளை விரட்டினார்.
ஒரு கட்டத்தில் அவரை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய கஷ்டமாக இந்திய அணி வீரர்களுக்கு மாறிவிட்டது. இந்த தருணத்தில் பென் டக்கட் 98 ரன்கள் எடுத்திருந்த போது ஜெயிஸ்வால் கேட்சை கோட்டைவிட்ட்து மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு அவர் சதம் விளாசி அசத்தினார்.
ஜாக் கிராலி 65 ரன்களிலும், ஆலி போப் 8 ரன்களிலும் எடுத்திந்தபோது பிரசித் கிருஷ்ணா அவர்களுடைய விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் டக்கட் தொடர்ந்து அதிரடி காட்டியதால் இந்தியாவின் தோல்வி ஒரு கட்டத்தில் உறுதியானது. இந்த சூழலில் தான் பென் டக்கட் 149 ரன்கள் எடுத்திருந்த போது சர்துல் தாக்கூர் ஓவரை அடித்து ஆட முற்பட்டபோது கேட்ச் ஆனார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் குவித்த அதிரடி வீரர் ஹாரி புரூக் வந்தார். அவரும் அடுத்த பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன் மூலம் ஒரே ஓவரில் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை சர்துல் தாக்கூர் வீழ்த்தினார். ஹாட்ரிக் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். எனினும் சர்துல் தாக்கூரால் ஹாட்ரிக் எடுக்க முடியவில்லை. இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த இரண்டு விக்கெட் இந்தியாவுக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கின்றது.