மும்பை: அஸ்வின் இடத்தை நான் நிரப்புவேன் என தேர்வுக் குழுவுக்கு வெளிப்படையாக கோரிக்கை வைத்து இருக்கிறார் ஷர்துல் தாக்குர். ஆனால், பவுலிங்கில் அல்ல.. பேட்டிங்கில். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய டெஸ்ட் அணியில் ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டராக இடம் பிடித்து வந்தார். அவ்வப்போது அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டாலும் மாற்று வீரராகவாவது இடம் பிடித்து வந்தார்.
ஆனால், கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் தொடர்களில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், அவர் 2024-25 ரஞ்சி டிராபி தொடரில் ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதுவரை 30 விக்கெட்டுகளை 21.16 என்ற பவுலிங் சராசரியுடன் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 396 ரன்களை அடித்துள்ளார். இரண்டு போட்டிகளில் அவர் அடித்த சதங்களால் மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஒரு போட்டியில் அவரது பேட்டிங் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

இது பற்றி ஷர்துல் தாக்கூர் பேசிய போது, "எனது தன்னம்பிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டுக்காக விளையாடுவதை விட அதிக ஊக்கம் வேறு எதிலும் கிடைக்காது. இந்திய அணியின் வீரர்கள் தேர்வை பார்க்கும் போது, இந்தியாவில் விளையாடினாலும் வெளிநாட்டில் விளையாடினாலும் ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யும் ஒரு பந்து வீச்சாளர் தேவை. ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த விதத்தில் விளையாடி பல போட்டிகளை வென்று கொடுத்து இருக்கிறார். ரவீந்திர ஜடேஜாவும் அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்த இடத்தில் சிறப்பாக செயல்படும் திறமை எனக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்."
"நான் அணியில் மூன்றாவது அல்லது நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்தாலும் யாருக்கும் குறைந்தவன் இல்லை. மும்பை அணிக்காக ரஞ்சி டிராபியில் நான் முதன்மை பந்துவீச்சாளராக செயல்பட்டு இருக்கிறேன். புதிய பந்தில் பவுலிங் செய்து இருக்கிறேன். எனவே, ஜஸ்பிரித் பும்ரா ஒரு பக்கத்திலிருந்து பந்து வீசும் போது இந்திய அணியின் கேப்டன் என்னை மறுபக்கத்தில் இருந்து பந்து வீச அழைத்தால் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்."
"இது எதுவும் எனக்கு புதியது அல்ல. எனது பந்துவீச்சு பன்மைத் தன்மை வாய்ந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப அதை நான் மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்ஷர்துல் தாக்கூர். மேலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது பெயர் அணியில் இடம் பெறாதது சற்று வருத்தமாக இருந்ததாகவும், ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். தற்போது தனது கவனம் முழுவதும் இங்கிலாந்து தொடரின் மீது இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் ஆல்ரவுண்டர்களையே அதிக அளவில் இந்திய அணியில் தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்று விதமான அணிகளிலும் பல்வேறு ஆல்ரவுண்டர்கள் இடம் பிடித்து உள்ளனர்.
இதுவரை ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே ஆல்ரவுண்டர்களாக முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், தற்போது அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சிவம் துபே என பல ஆல்ரவுண்டர்கள் இடம் பிடித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பவுலிங் ஆல்ரவுண்டர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் ஷர்துல் தாக்கூர் தன்னை முதன்மை படுத்திக் கொண்டிருக்கிறார்.