மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடைசி ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றாலும் கடைசி ஓவரை வீசிய ஆல்ரவுண்டர் சிவம் துபே தனக்கு ஏற்பட்ட பதற்றம் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் சதம் அடித்து களத்தில் இருந்ததால், கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டாலும் ஆட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த இக்கட்டான சூழலில் பந்துவீசிய அனுபவம் குறித்து பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் சிவம் துபே தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதி போன்ற ஒரு பெரிய போட்டியில் கடைசி ஓவரை வீசுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் எதிரணி பேட்ஸ்மேன் சதமடித்துக் களத்தில் இருக்கும்போது பொறுப்பு இன்னும் அதிகரிக்கும். இது குறித்துப் பேசிய சிவம் துபே, "கடைசி ஓவரை நான் தான் வீசப்போகிறேன் என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டுவிட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உலகக் கோப்பை அரையிறுதியின் கடைசி ஓவரை வீசும்போது எனக்கு நிச்சயமாகப் பதற்றமாகத் தான் இருந்தது. ஆனால் நான் என் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட விரும்பினேன்" என்று தெரிவித்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்றாலும், முதல் இரண்டு பந்துகள் தான் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும் என்பதைத் தான் உணர்ந்திருந்ததாகத் துபே கூறினார். "முதல் இரண்டு பந்துகளைச் சரியாக வீசுவதில் மட்டுமே எனது முழு கவனமும் இருந்தது. ஏனெனில் அந்தப் பந்துகள் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றும் என்று எனக்குத் தெரியும்" என்றார்.
அவர் திட்டமிட்டபடியே முதல் பந்தில் இரண்டு ரன்கள் ஓட ஆசைப்பட்டு ஜேக்கப் பெத்தேல் ரன் அவுட் ஆனார். அடுத்த இரண்டு பந்துகளில் துபே மிகச் சிறப்பாகப் பந்துவீசி ஒற்றை ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் இங்கிலாந்து வெற்றி பெற 3 பந்துகளில் 27 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. கடைசி மூன்று பந்துகளில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை அடித்தாலும், அதற்கு முன்னரே துபே தனது முதல் மூன்று பந்துகளில் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டார்.

பந்துவீச்சில் வெற்றியைத் தேடித்தந்த சிவம் துபே, பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 43 ரன்கள் குவித்து இந்திய அணி 253 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்ட உதவினார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், "அணிக்குத் தேவையான நேரத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிப்பை அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். இந்திய அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியிலும் இதே அணிகள் மோதியது குறிப்பிடத்தக்கது.