சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் சிவம் துபே இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். அவரை நீக்கியது தவறு என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருந்தனர். சிவம் துபே 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்து இருந்தார்.
அதன் பின்னரும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்று வந்தார். இடையே அவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அதில் இருந்து அவர் மீண்டு விட்ட போதிலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க அவர் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார்.

உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபியில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தன்னை தேர்வு செய்யாததற்கு பதிலடி அளிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வழியில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இருக்கிறார் சிவம் துபே.
முதல் இன்னிங்ஸில் மூன்று பந்துகளில் டக் அவுட் ஆகி ஆட்டம் இழந்து வெளியேறிய சிவம் துபே, இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் எடுக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவரை இந்திய அணியில் தேர்வு செய்யாதது சரிதான் என தற்போது விமர்சித்தும் வருகின்றனர். இனி அடுத்து வரும் ரஞ்சி டிராபி போட்டிகளில் சிவம் துபே ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு திரும்புவது பற்றி யோசிக்கலாம். அப்போதும் கூட அவருக்கு உறுதியாக இடம் கிடைக்கும் என கூற முடியாது.
இந்திய டி20 அணியில் சிவம் துபேவின் இடத்தை நிதிஷ் குமார் ரெட்டி பிடிக்க இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர் வேகப் பந்து வீச்சால் ஆல் ரவுண்டர் என்பதால் சிவம் துபேவுக்கு இணையாக பார்க்கப்படுகிறார்.
மேலும், நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவித்து இருந்ததால் அவருக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இனி சிவம் துபே இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் நிதிஷ் குமாரை விட தான் சிறந்த ஆல் ரவுண்டர் என்பதையும், பேட்டிங்கில் அதிக ரன் குவிக்க முடியும் என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டும்.