சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக சிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மாற்றம் மூன்றாவது டி20 போட்டியில் இருந்து அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங்கிற்கு காயம் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது.

வலைப்பயிற்சியின் போது நிதிஷ் குமார் ரெட்டிக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டு, வலி இருந்தது. அதே போல, முதல் போட்டியின் போது ரிங்கு சிங்கிற்கு முதுகில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இவர்கள் இருவரையும் ஆட வைப்பதில் சிக்கல் உள்ளது.
ஏற்கனவே, துவக்க அபிஷேக் சர்மாவுக்கு பயிற்சியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது, தற்போது மேலும் இரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர். அபிஷேக் சர்மாவின் காயம் பெரிதாக இல்லாத நிலையில் அவர் போட்டியில் விளையாடுவார் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான மாற்றப்பட்ட இந்திய அணி விவரம் -
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரமன்தீப் சிங்.
நிதிஷ் குமார் ரெட்டி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்பதால் அவருக்கு இணையாக மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மிடில் ஆர்டரில் விளையாடும் ரிங்கு சிங்கிற்கு பதிலாக ரமன்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இணைவார்கள்.
நிதிஷ் குமார் ரெட்டி உடனடியாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட உள்ளார். ரிங்கு சிங்கிற்கு ஏற்பட்டிருக்கும் காயம் நான்காவது டி20 போட்டிக்கு முன்னதாக குணமாக வாய்ப்பிருப்பதால் அவர் அணியுடன் இருப்பார். சிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங் சமீபத்தில் நடந்த ரஞ்சி டிராபி போட்டியில் டக் அவுட் ஆகி இருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது விமர்சனத்தையும் கிளப்பி உள்ளது. அவர்கள் இருவரும் இந்திய டி20 அணியில் இதற்கு முன் இடம் பிடித்து இருந்த நிலையில் இங்கிலாந்து தொடர்களுக்கான அணியில் அவர்களுக்கு முதலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தது.
அதனால் அவர்கள் இருவரும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினர். மும்பை அணியில் இடம் பெற்று ஆடிய சிவம் துபே இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மறுபுறம் ரமன்தீப் சிங் பஞ்சாப் அணியில் இடம் பெற்று ஆடினார். அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 16 மற்றும் 0 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர்கள் இருவருக்குமான வாய்ப்பு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.